கடலில் மாயமான மீனவரை கண்டுபிடிக்க கோரி எம்.பி., எம்.எல்.ஏ., முற்றுகை

ராமநாதபுரம்,:மண்டபம் கடல் பகுதியில் மீன் பிடிக்க சென்ற போது சூறாவளி காற்றால் படகு கவிழ்ந்து மாயமான மீனவரை கண்டுபிடித்து தரக்கோரி உறவினர்கள் ராமநாதபுரத்தில் எம்.பி., நவாஸ்கனி, எம்.எல்.ஏ., காதர் பாட்ஷா, கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோனை முற்றுகையிட்டனர்.

மண்டபம் வடக்கு கடற்கரை பகுதியைச் சேர்ந்த சர்புதீனுக்கு சொந்தமான படகில் ஜூன் 18ல் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற போது சூறாவளி காற்றால் படகு கவிழ்ந்தது.

படகில் இருந்த அனீஷ், மாதவன் மீனவர்கள் கடலில் நீந்தி கரை சேர்ந்தனர். அதே படகில் சென்ற மண்டபம் சேதுநகரைச் சேர்ந்த சீனி இப்ராஹிம்ஷா 45, கடலில் மூழ்கி மாயமானார். மூன்று நாட்களாகியும் இதுவரை அவரது நிலைகுறித்து தெரியவில்லை.

அவரை மீட்க உரிய நடவடிக்கையை மீன்வளத்துறையினர் எடுக்கவில்லை என உறவினர்கள் குற்றம் சாட்டினர். ராமநாதபுரம் பழைய கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் நடந்த மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு, கணிப்பாய்வுக்குழு கூட்டத்தில் பங்கேற்க வந்த கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், எம்.பி., நவாஸ்கனி, எம்.எல்.ஏ., காதர் பாட்ஷாவை மீனவரின் உறவினர்கள் முற்றுகையிட்டனர். சீனி இப்ராஹிம்ஷாவை கண்டுபிடித்து தர வேண்டும் என அவர்களிடம் முறையிட்டனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதியளித்தார்.

Advertisement