'‛பாஸ்' நிபந்தனைகளை ரத்து செய்து உத்தரவு கட்சிகள் மாநாட்டிற்கு வாகன பாஸ் வழங்கப்பட்டதா: -நீதிபதி
மதுரை: மதுரையில் நாளை (ஜூன்22) நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு வரும் வாகனங்கள், அந்தந்த பகுதி டி.எஸ்.பி.,களிடம் அனுமதி பாஸ் பெற வேண்டும் என்ற நிபந்தனையை, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அமர்வு ரத்து செய்தது.
ஹிந்து முன்னணி மாநில செயலாளர் முத்துக்குமார் ஏற்கனவே தாக்கல் செய்த மனு:மதுரை பாண்டிகோவில் ரிங் ரோடு வண்டியூர் டோல்கேட் அருகே அம்மா திடலில் ஜூன் 22ல் முருக பக்தர்கள் மாநாடு நடைபெறும். இதற்காக முருகனின் அறுபடை வீடுகளை குறிக்கும் மாதிரி வடிவங்கள் (மினியேச்சர்கள்) மாநாட்டு வளாகத்தில் தற்காலிகமாக நிறுவ அண்ணாநகர் போலீஸ் உதவி கமிஷனர் அனுமதி மறுத்தார். அதை ரத்து செய்ய வேண்டும். அனுமதிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
ஜூன் 13 ல் நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார்.
அரசு தரப்பு அளித்த பதில்: மாநாட்டிற்கு வரும் வாகனங்கள் அந்தந்த டி.எஸ்.பி.,அலுவலகத்தில் விண்ணப்பித்து அனுமதி அட்டை (பாஸ்) பெற வேண்டும். ஒவ்வொரு மண்டலத்திற்கும் வெவ்வேறு வண்ண பாஸ்கள் வழங்கப்படும். பாஸ் பெறாமல் வரும் வாகனங்கள் மதுரைக்குள் அனுமதிக்கப்படாது என்பன உள்ளிட்ட 52 நிபந்தனைகளுடன் ஜூன் 22 ல் மாநாடு நடத்த அனுமதித்து அண்ணாநகர் போலீஸ் உதவி கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு தெரிவித்தது.
இதை பதிவு செய்த நீதிபதி,'மாநாட்டில் பங்கேற்க வாகன அனுமதி கோரிய 24 மணி நேரத்தில் அனுமதி வழங்க வேண்டும். நிராகரித்தால் அதற்குரிய காரணங்களை தெளிவுப்படுத்த வேண்டும். அறுபடை வீடு மாதிரி வடிவ கண்காட்சி, மாநாடு நடத்தலாம்,' என உத்தரவிட்டார்.
மேல்முறையீடு
மாநாட்டிற்கு வரும் வாகனங்கள் அந்தந்த டி.எஸ்.பி.,அலுவலகத்தில் விண்ணப்பித்து அனுமதி பாஸ் பெற வேண்டும். பாஸ் பெறாமல் வரும் வாகனங்கள் மதுரைக்குள் அனுமதிக்கப்படாது' என்ற நிபந்தனையை தனி நீதிபதி ரத்து செய்யாததை எதிர்த்து ஹிந்து முன்னணி மண்டல செயலாளர் அரசு பாண்டி மேல்முறையீடு செய்தார்.
நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், கே.ராஜசேகர் அமர்வு விசாரித்தது.
நீதிபதிகள்: இதற்கு முன் நடந்த அரசியல் கட்சிகள் மாநாட்டிற்கு வாகன பாஸ் வழங்கப்பட்டதா.
அரசு தரப்பு: பா.ம.க.,மாநாடு, தேவர் ஜெயந்தி, இமானுவேல் சேகரன் குருபூஜையின்போது வாகனங்களுக்கு பாஸ் வழங்கப்பட்டது. அதுபோல் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு வரும் வாகனங்களை முறைப்படுத்த பாஸ் வழங்கப்படுகிறது. ஒரே இடத்தில் பாஸ் வழங்கினால் தாமதம் ஏற்படும். இதை தவிர்க்க பல்வேறு இடங்களில் பாஸ் வழங்கப்படுகிறது.
மனுதாரர் தரப்பு: பாஸ் பெற வேண்டும் என்ற நிபந்தனை உள்நோக்கில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அது நடைமுறை சாத்தியமற்றது. நிபந்தனையானது மக்கள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எளிதாக சென்றுவருவதை தடுக்கிறது. இது அரசியல் மாநாடல்ல. மதம் சம்பந்தப்பட்டது. ஒரு லட்சம் பேர் கந்தசஷ்டி பாடுவர்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
போலீசுக்கு அதிகாரம் இல்லை
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது:
கொடைக்கானல், ஊட்டியில் இயற்கை வளங்களை பாதுகாக்கும் நோக்கில் அங்கு செல்லும் வாகனங்களின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி இ-பாஸ் வழங்கும் நடைமுறையை கலெக்டர்கள் பின்பற்றுகின்றனர். முருக பக்தர்கள் மாநாட்டிற்கு வெளிமாவட்டம், வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் வாகனங்களில் வருவர். இதற்கு பாஸ் வழங்கும் நிபந்தனை விதிக்க மோட்டார் வாகன சட்டப்படி போலீசாருக்கு அதிகாரம் இல்லை. மாநாடு நடக்கும் பகுதி நுழைவு வாயில் மற்றும் வாகன நிறுத்தம் அனுமதிக்கப்பட்ட இடங்களில் பூத்கள் அமைக்க வேண்டும். மாநாட்டிற்கு வரும் வாகனங்களின் டிரைவர்கள் ஓட்டுநர் உரிமம், ஆதார், வாகன பதிவு ஆவணத்தை பூத்களில் உள்ள போலீசாரிடம் சமர்ப்பித்து பதிவு செய்ய வேண்டும். பாஸ் நிபந்தனை ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
அதிக தொகுதி வேண்டும்; ஆட்சியில் பங்கும் தரணும்; தி.மு.க.,வுக்கு காங்கிரஸ் நெருக்கடி
-
கம்யூ., அவதூறு; பா.ஜ., நிர்வாகி மண்டை உடைப்பு
-
சிவப்பு என்றால் தோல்வி; ஆரஞ்சு நிறம் கடும் போட்டி; தொகுதிகளை பட்டியல் போடுகிறது தி.மு.க.,
-
கொடிக்கம்பங்கள் அகற்றம் எதிராக மார்க்சிஸ்ட் வழக்கு; உயர்நீதிமன்றம் தள்ளுபடி
-
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
-
தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி உறுதி: அடித்துச் சொல்கிறார் அமித் ஷா!