ஸ்டாலின் குறித்து கார்ட்டூன் வெளியிடுவோம் தி.மு.க.,வுக்கு அ.தி.மு.க., எச்சரிக்கை

மதுரை:''அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமியின் கண்ணியத்தை குறைக்கும் வகையில் கார்ட்டூன் வெளியிட்டதற்கு தி.மு.க., மன்னிப்பு கேட்க வேண்டும்,'' என, மதுரையில் சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் உதயகுமார் எச்சரித்துள்ளார்.

தி.மு.க., ஐ.டி., விங்க் செயலாளரான அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா 'எக்ஸ்' தளத்தில் கீழடி விவகாரத்தில் பழனிசாமியை கிண்டல் செய்து கார்ட்டூன் வெளியிட்டிருந்தார். அதை உடனடியாக நீக்கவும், ராஜா மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி மதுரை எஸ்.பி., அரவிந்த்திடம் உதயகுமார் தலைமையில் மாவட்ட பொறுப்பாளர் தண்டரை மனோகரன், மருத்துவரணி இணைச்செயலாளர் டாக்டர் சரவணன், முன்னாள் எம்.எல்.ஏ., தமிழரசன் உள்ளிட்டோர் புகார் அளித்தனர்.

பின் உதயகுமார் கூறியதாவது: பழனிசாமி தி.மு.க., அரசின் குறைகளை தினமும் சுட்டிக்காட்டி வருவதை அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியாமல் தனி நபர் விமர்சனத்தில் இறங்கியுள்ளனர். நான்கரை ஆண்டுகள் மக்களுக்கான எந்த திட்டத்தையும் முதல்வர் ஸ்டாலின் செய்யவில்லை. அதனால் அதை திசை திருப்ப அவதுாறு செய்தியை பரப்புகிறார்கள். எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது தனக்குத்தானே சட்டையை ஸ்டாலின் கிழித்துக்கொண்டார். அதுகுறித்து நாங்களும் கார்ட்டூன் வெளியிட முடியும்.

அது எங்களுக்கு தேவையில்லை. பழனிசாமி மீது போட்ட பதிவுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும்.

தமிழகத்தில் நடக்கும் போதைப்பொருள் பயன்பாடு, பாலியல் சம்பவங்களுக்கு கார்ட்டூன் போடுங்கள். கள்ளச்சாராயம் அருந்தி 65 பேர் பலியாகி ஓராண்டு ஆகிவிட்டது. அதற்கும், ராஜா நடத்தும் சாராய ஆலை குறித்தும் கார்ட்டூன் போடுங்கள். தொடர்ந்து இதுபோன்று பதிவு செய்தால் முற்றுகை போராட்டம் நடத்துவோம்.

கீழடி விவகாரத்தில் அ.தி.மு.க., போராடும் என பழனிசாமி தெரிவித்து விட்டார். ஆனால் ஸ்டாலின் இங்கே மாவீரன் போலவும், டில்லியில் சமாதான கொடியை பறக்கவிட்டும் இரட்டை வேடம் போடுகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement