அமைச்சர் ராஜா மீது நடவடிக்கை எடுக்காவிடில் நீதிமன்றத்தை நாடுவோம் பழனிசாமி கார்ட்டூன் விவகாரத்தில் அ.தி.மு.க., அறிவிப்பு

மதுரை:''அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி குறித்து தி.மு.க., ஐ.டி., விங்க் செயலாளரும், அமைச்சருமான டி.ஆர்.பி.ராஜா வெளியிட்ட கார்ட்டூனை நீக்க வேண்டும். அவர் மீது நடவடிக்கை எடுக்காவிடில் நீதிமன்றத்தை நாடுவோம்'' என அ.தி.மு.க., ஐ.டி., விங்க் அறிவித்துள்ளது.

அமைச்சர் ராஜா குறித்து மதுரை போலீஸ் கமிஷனர் லோகநாதனிடம் முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ, ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., ஐ.டி., விங்க் செயலாளர் ராஜ்சத்யன் ஆகியோர் தனித்தனியே புகார் அளித்தனர்.

செல்லுார் ராஜூ கூறியதாவது: அமைச்சர் என்பவர் பாரபட்சமின்றி நடக்க வேண்டும். தமிழ்நாட்டை அமைதி பூங்காவாக கொண்டு செல்வதை விட்டுவிட்டு தி.மு.க., அரசு பழனிசாமியை அவதுாறாக சித்தரித்ததை கண்டிக்கிறோம். உடனடியாக இந்த விவகாரத்தில் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுவரை எத்தனையோ அரசியல் இயக்கங்கள் விமர்சனம் செய்திருக்கிறார்கள். ஆனால் இந்த அளவுக்கு தரம் தாழ்ந்து விமர்சிக்கவில்லை என்றார்.

திருச்செந்துார் மீதுதான் ஆர்வம்



ராஜன் செல்லப்பா கூறியதாவது: அவதுாறாக சித்தரித்து அ.தி.மு.க., தொண்டர்களை துாண்டிவிட்டு சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தி அதன்மூலம் எங்களை அரசியல் ரீதியாக களங்கப்படுத்த தி.மு.க., முயற்சிக்கிறது.

இதுவரை 'அவல ஆட்சி' என்று சொல்லி வந்தோம். இனி 'ஆபாச ஆட்சி' என்று சொல்லும் அளவுக்கு மாறிவிட்டது. திருப்பரங்குன்றம் கோயில் கும்பாபிஷேகத்திற்கு இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில் அது சார்ந்த எந்த முன்னேற்பாடு பணிகளையும் செய்யவில்லை. திருச்செந்துாருக்கு காட்டும் ஆர்வத்தை அறநிலையத்துறை இங்கு காட்டவில்லை என்றார்.

ராஜ்சத்யன் கூறியதாவது: கீழடி நாயகர் என்றால் அது பழனிசாமி தான்.

கீழடிக்கான எல்லா பணிகளையும் துவக்கியது அவரது ஆட்சியில்தான். வரலாற்றை திரிப்பதில் தி.மு.க.,வுக்கு பெரும் பங்கு உண்டு. மிக இழிவான வகையில் ஒரு கார்ட்டூனை தி.மு.க., ஐ.டி., விங்க் நிர்வாகிகள் வெளியிட்டுள்ளார்கள். இதுவரைக்கும் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றத்திற்கு செல்வோம். இவ்வாறு கூறினார்.

Advertisement