முருக பக்தர்கள் மாநாட்டில் பூஜித்த வேலுடன் பங்கேற்கணும் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வேண்டுகோள் பா.ஜ., மாவட்ட தலைவர்களுக்கு வேண்டுகோள்

மதுரை:மதுரையில் நாளை (ஜூன் 22) நடக்கும் முருக பக்தர்கள் மாநாட்டில் பா.ஜ., மாவட்ட தலைவர்கள் பூஜிக்கப்பட்ட ஒரு அடி வேலுடன் வரவேண்டும் என மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: தமிழக நலன்சார்ந்த பிரச்னைகளை முருகப்பெருமானின் பொற்பாத சரணங்களில் நாம் சமர்ப்பித்துள்ள வேளையில் அவை யாவும் நிறைவேறும் பொருட்டு வீரத்தின் சின்னமாகவும், ஞானத்தின் தெய்வீக குறியீடாகவும் விளங்கும் முருகப்பெருமானின் கையில் வீற்றிருக்கும் வேலை வணங்க கடமைப்பட்டுள்ளோம்.

தமிழக பா.ஜ.,வின் 67 மாவட்ட தலைவர்கள் மாநாட்டிற்கு ஒரு அடி வேல் கொண்டு வரவேண்டும். அதனை அவரவர் மாவட்டங்களில் உள்ள முருகன் கோயில்களில் வைத்து பூஜித்து எடுத்து வரவேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

மதுரை நகர் மாவட்டத்தினர் - காந்தி மியூசியம் அருகில் உள்ள பூங்கா முருகன் கோயில், மதுரை கிழக்கு மாவட்டம் அழகர்கோவில் மலை மீதுள்ள சோலைமலை முருகன் கோயில், மேற்கு மாவட்டத்தினர் திருப்பரங்குன்றம் முருகன் கோயில், திண்டுக்கல் மேற்கு மாவட்டத்தினர் பழநி முருகன் கோயில், தேனி மாவட்டத்தினர் பெரியகுளம் தென்கரை பாலசுப்ரமணிய சுவாமி கோயில், ராமநாதபுரம் மாவட்டத்தினர் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில், சிவகங்கை மாவட்டத்தினர் குன்றக்குடி சண்முகநாதர் கோயில், விருதுநகர் மேற்கு மாவட்டத்தினர் சிவகாசி காசி விஸ்வநாதர் கோயில், கிழக்கு மாவட்டத்தினர் விருதுநகர் வீரக்குடி முருகய்யனார் கோயில், தென்காசி மாவட்டத்தினர் தென்காசி அருகே தோரணமலை முருகன் கோயிலில் பூஜித்த வேலை கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாநாடுக்கு வந்தபின் மேடையில் மாநில தலைவரிடம் அதை வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Advertisement