திருநீறு அழித்த விவகாரம் திருமாவளவன் மீது புகார்

திருப்பரங்குன்றம்: 'திருப்பரங்குன்றத்தில் மதக் கலவரத்தை துாண்டும் வகையில் உள்நோக்கத்துடன் செயல்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என போலீசில் அகில பாரத அனுமன் சேனா மாநில அமைப்பு பொதுச்செயலாளர் ராமலிங்கம் புகார் அளித்துள்ளார்.

திருப்பரங்குன்றம் போலீசில் அளித்த அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:

திருப்பரங்குன்றம் மலை தொடர்பாக தேவையில்லாத குழப்பங்கள் நிலவி வந்த நிலையில், மூன்று மாதங்களாக இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. இந்நிலையில் திருப்பரங்குன்றம் மக்களின் ஒற்றுமையை சீர்குலைத்து மதக் கலவரத்தை துாண்டும் உள்நோக்கத்துடன் நேற்று முன்தினம் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எம்.பி., திடீரென திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குள் சென்று திரும்பும் போது கோயில் வளாகத்திற்குள்ளேயே பக்தர்கள் முன் அவரது நெற்றியில் இருந்த திருநீற்றை அழித்து ஹிந்து ஆன்மிக மக்களின் மனம் புண்படும் விதமாக செயல்பட்டு உள்ளார்.

அவரது செயல் திருப்பரங்குன்றம் மக்களின் அமைதியை சீர்குலைக்கும் விதமாக உள்ளதால், நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Advertisement