வீடுகளில் சோலார் பேனல்கள் பொருத்தியவர்களுக்கு... ரூ. 7.4 கோடி மானியம்; இப்போதே திட்டமிட்டால் பணத்தை சேமிக்கலாம்

புதுச்சேரி: புதுச்சேரியில் சூரிய ஒளி மின் திட்டத்தின் மூலம் மின் உற்பத்தி செய்த 1,079 பேருக்கு 7.4 கோடி மானியத்தை மின் துறை செலுத்தியுள்ளது.

நாட்டில் ஒரு கோடி வீடுகளுக்கு மாதம் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கும் வகையில் ரூ.75,000 கோடிக்கு மேற்பட்ட முதலீட்டில் பிரதமர் சூரிய ஒளி மின் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார்.

நாட்டில் சூரிய மின்சக்தி பயன்பாட்டை அதிகரிக்கும் முயற்சியாக இத்திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இதற்காக வீடுகளின் மேற்கூரையில் சோலார் பேனல்கள் பொருத்துவதற்கு மத்திய அரசு மானியம் வழங்குகிறது.

அரசு மானியங்கள் கிடைப்பதன் மூலம், அதிகமான குடும்பங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் இப்போது மேற்கூரையில் சோலார் பேனல்களை பொருத்த ஆர்வம் காட்டி வருகின்றன. புதுச்சேரியை பொருத்தவரை இதுவரை 1,079 பேரின் வீடுகளில் சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளது. இவர்களுக்கு இதுவரை 7.4 கோடி ரூபாய் மானியத்தை வங்கி கணக்கில் புதுச்சேரி அரசு செலுத்தியுள்ளது.

அடுத்ததாக கடந்தாண்டு சோலார் பேனல்கள் மூலம் மின் உற்பத்தி செய்த மின் உற்பத்தியாளர்களுக்கு மானியம் செலுத்துவதற்காக வங்கி கணக்கு விபரங்களும் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

இது தொடர்பாக சோலார் பயனாளிகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டு வருகிறது. நீங்களும் இதுமாதிரி உங்களுடைய வீடுகளில் சோலார் பேனல்கள் பொருத்துவதன் மூலம் மின் உற்பத்தி செய்து, உங்கள் வீட்டிற்கும் ஜூரோ மின் கட்டண பில்லை வர வைக்க முடியும். அத்துடன் மின் உற்பத்தி செய்து அரசிடமிருந்தே பணம் சம்பாதிக்கவும் முடியும்.

அதற்கான வழிமுறைகளை மின் துறை அதிகாரிகள் கூறியதாவது:

வீடுகளில் சோலார் பேனல்கள் பொருத்திய பிறகு மின் உற்பத்தி துவங்கும். ஒவ்வொரு மாதமும் சோலார் பேனல்கள் மூலம் உற்பத்தியாகும் மின்சாரத்தை மின் துறை ஊழியர்கள் வந்து கணக்கீடு செய்வர். உங்களுடைய பயன்பாட்டிற்கு போக நீங்கள் கூடுதலாக உற்பத்தி செய்த சோலார் மின்சாரம், சோலார் அக்கவுண்ட்டில் குறித்து வைத்து கொள்ளப்படும்.

ஒவ்வொரு மாதமும் இப்படி கணக்கீடு நடக்கும். மார்ச் மாதம் முடிந்ததும் அந்த ஆண்டில் நீங்கள் ஒட்டுமொத்தமாக உற்பத்தி செய்த சோலார் மின்சாரத்தில் இருந்து நீங்கள் வீடுகளில் பயன்படுத்திய மின்சாரம் கழித்து கொள்ளப்படும்.

அதன் பிறகு கூடுதலாக உற்பத்தி செய்யப்பட்ட சோலார் மின்சாரத்திற்கு ஒரு யூனிட்டிற்கு ரூ.5.77 வீதம் கணக்கீட்டு உங்களுடைய வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.

இதன் மூலம் நீங்கள் வருவாயும் ஈட்டலாம். வீடுகளில் இந்த சோலார் பேனல்கள் பொருத்தவும் அரசு மானியம் வழங்கி வருகிறது என்றனர்.

இலவச மின்சார திட்டத்தின்கீழ் மானியம் பெற்று தங்கள் வீடுகளின் மேற்கூரையில் சூரிய மின்சக்தி தகடுகளை பொருத்த விரும்புவோர் https://pmsuryaghar.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். மாநிலம், மாவட்டத்தை தேர்வு செய்து, மின் நுகர்வு எண், மொபைல் எண், இ-மெயில் முகவரியை பதிவு செய்ய வேண்டும். ஒப்புதல் கிடைத்ததும் வீடுகளில் சூரியமின்சக்தி தகடு பொருத்தப்படும்.

மானிய விவரங்கள் என்னென்ன?

குடியிருப்பு வீடுகளுக்கு 1 கிலோவாட் முதல் 2 கிலோவாட் வரை திறன் உள்ள சோலார் பேனல்கள் பொருத்த ரூ.30,000 மானியம் வழங்கப்படும். கூடுதல் திறன் கொண்ட சூரிய மின்சக்தி தகடுகள் பொருத்துவோருக்கு, கிலோ வாட் ஒன்றுக்கு ரூ.18,000 வீதம், 3 கிலோவாட் வரை மொத்தம் ரூ.78,000 மானியம் வழங்கப்படும். 3 கிலோ வாட் திறனுக்கு அதிகமான அளவில் சூரிய மின்சக்தி தகடுகள் பொருத்துவோருக்கு உச்சவரம்பாக ரூ.78,000 மானியம்

வழங்கப்படும்.மாத மின் நுகர்வு சராசரியாக 150 யூனிட் வரை இருந்தால், 1 முதல் 2 கிலோவாட் திறனுள்ள சூரிய சோலார் பேனல்கள் பொருத்தி ரூ.30,000 முதல் ரூ.60,000 வரை மானிய உதவி பெறலாம். மின் நுகர்வு மாதத்துக்கு சராசரியாக 150 யூனிட் முதல் 300 யூனிட் வரை இருந்தால் 2 கிலோவாட் முதல் 3 கிலோவாட் திறனுள்ள சூரிய மின்சக்தி தகடுகள் பொருத்தி ரூ.60,000 முதல் ரூ.78,000 வரை மானியம் பெறலாம். மாத சராசரி மின் நுகர்வு 300 யூனிட்டுக்குமேல் உள்ளவர்கள் 3 கிலோவாட் திறனுக்கு அதிக அளவிலான சோலார் பேனல்களை பொருத்தினாலும் மானிய உச்ச வரம்பு ரூ.78,000 தான்.



' எனக்கு ஜூரோ பில் தான் '

நாவற்குளம் செல்வக்குமார்: அண்மையில் 5 கிலோ வாட் சோலார் பேனலை வீடுகளில் பொருத்திய லாஸ்பேட்டை நாவற்குளம் மெயின்ரோட்டை சேர்ந்த செல்வக்குமார் கூறியதாவது; எனது வீட்டில் 3 ஏ.சி., க்கள், 10 எல்.இ.டி., விளக்குகள், 5 மின் விசிறிகள் ஓடுகின்றன. ஷாக் அடிக்கும் விதத்தில் மாதந்தோறும் சராசரியாக 7 ஆயிரம் ரூபாய் மின் கட்டணம் வருகிறது. இதனால் தான் சோலாருக்கு மாறிவிட்டேன். என்னுடைய வீட்டில் 5 கிலோ வாட் சோலார் பேனல்களை பொருத்தியுள்ளேன். இப்போது தினசரி 25 யூனிட் சோலார் மின்சாரம் உற்பத்தியாகிறது. மூன்று நாட்களில் 75 யூனிட் உற்பத்தியாகிவிட்டது. பயன்பாட்டிற்கு போக மின் துறைக்கு கொடுக்கின்றேன். இனி ஒவ்வொரு மாதமும் நான் கட்ட வேண்டிய 7 ஆயிரம் ரூபாய் மின் கட்டணம் மிச்சம். அத்துடன் கூடுதலாக உற்பத்தியாகும் மின்சாரத்தினை புதுச்சேரி அரசுக்கு கொடுத்து வருவாயும் ஈட்ட போகிறேன்' என்றார்.நாவற்குளம் சீனிவாசன்: எனது வீட்டிற்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன், 2, 85,000 ரூபாய் செலவில் 5 கிலோ வாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் சோலார் பேனல்களை அமைத்தேன். இதனால் கடந்த மூன்று ஆண்டுகளாக எனக்கு மின் கட்டணம் வரவில்லை. எனது வீட்டில் 'ஏசி' வாஷிங் மிஷின், பிரிட்ஜ் உள்ளிட்ட அனைத்து மின்சாதன உபகரணங்களும் பயன்படுத்துகிறோம். சோலார் பேனல்கள் அமைப்பதற்கு முன், எனது வீட்டிற்கு சராசரியாக மாதம் 4,500 ரூபாய்க்கு மேல் மின் கட்டணம் வரும். சோலார் பயன்பாட்டிற்கு வந்த பின்னர் தற்போது எனக்கு ஜீரோ பில் தான் வருகிறது.

Advertisement