விவசாயம் செய்யும் சமவெளி மக்கள் எல்லையில் சலுகை கேட்டு மனு

கோத்தகிரி : 'நீலகிரியில் விவசாயம் செய்யும் சமவெளி பகுதி விவசாயிகளுக்கு எல்லையில் சலுகை வழங்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழக விவசாயிகள் சங்க, நீலகிரி மாவட்ட தலைவர் ஜோகராஜ், விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் அளித்த மனு:

கோவை மாவட்டத்தை சேர்ந்த சிலர், நீலகிரியில் நிலங்களை வாங்கி விவசாயம் செய்து வருகின்றனர். இதனால், அடிக்கடி நீலகிரி மாவட்டத்துக்கு வந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இந்நிலையில் மாவட்ட எல்லையில், இ--பாஸ் நடைமுறை உள்ளது. அங்கு மின்சார வாகனங்களுக்கு இலவசமாகவும், இதர வாகனங்களுக்கு கட்டணம் வாங்கியும் அனுமதிக்கப்படுகிறது.

இந்த சோதனை சாவடிகளில் விவசாயிகள் தங்களுடைய நில ஆவணங்கள் மற்றும் பயிர் செய்ததற்கான ஆவணங்களை காட்டினாலும், வாகன பதிவு எண் அடிப்படையில், நுழைவு கட்டணம் வசூலித்து, அனுமதி சீட்டு பதிவு செய்யும் நடைமுறை பின்பற்றுபடுகிறது. 'இதற்கு விலக்கு அளிக்க வேண்டும்,' என, நீலகிரி எஸ்.பி., மற்றும் கலெக்டர் அலுவலகத்தை அணுகியும் நடவடிக்கை இல்லை.

ஆனால், விவசாயம் செய்து சிரமப்படும் விவசாயிகளுக்கு அனுமதி சீட்டு கேட்பதும், நுழைவு கட்டணம், பசுமை வரி வசூலிப்பது வருத்தம் அளிக்கிறது. எனவே, இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement