வாழ்வில் நல்ல மாற்றம் ஏற்பட யோகா அவசியம் எம்.ஆர்.சி., கமாண்டன்ட் அறிவுரை

குன்னுார் : ''ஒவ்வொருவரின், வாழ்க்கையில் நல்ல மாற்றம் ஏற்பட அன்றாடம் யோகா அவசியம்,'' என, வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் கமாண்டன்ட் பிரிகேடியர் கிருஷ்ணேந்து தாஸ் பேசினார்.

'ஒரே பூமி; ஒரே ஆரோக்கியத்திற்கான யோகா' என்ற கருப்பொருளில், 11வது சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, குன்னுார் வெலிங்டன் கன்டோன்மென்ட் வாரியம் சார்பில், 'யோகா மகா கும்பம்' என்ற தலைப்பில், விழிப்புணர்வு மாரத்தான் நடந்தது.

வெலிங்டன் ஏரி பூங்காவில் துவங்கிய நிகழ்ச்சியை, வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் (எம்.ஆர்.சி.,) கமாண்டன்ட் பிரிகேடியர் கிருஷ்ணேந்து தாஸ் கொடியசைத்து துவக்கி வைத்து பேசுகையில், ''உலகம் முழுவதும் ஜூன், 21ல் சர்வதேச யோகா தினம் கொண்டாடும் நிலையில், ஒவ்வொருவரின், வாழ்க்கையில் சிறந்த மாற்றம் ஏற்பட அன்றாடம் யோகா அவசியம்,'' என்றார்.

பயிற்சி அக்னி வீரர்கள், ராணுவ அதிகாரிகள், ராணுவ வீரர்கள், தன்னார்வ அமைப்பினர், பள்ளி மாணவ மாணவியர், அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை அதிகாரிகள், கன்டோன்மென்ட் வாரிய ஊழியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு மாரத்தான், சப்ளை டிப்போ, போர் நினைவு சதுக்கம், எம்.ஆர்.சி., வழியாக தங்கராஜ் நினைவு ஸ்டேடியத்தில் நிறைவு பெற்றது.

அங்கு, ரெஜிமென்ட் சென்டர் கமாண்டன்ட் பிரிகேடியர் கிருஷ்ணேந்து தாஸ், கன்டோன்மென்ட் வாரிய முதன்மை நிர்வாக இயக்குனர் வினீத் பாபாசாகிப் லோட்டே உட்பட அக்னி வீரர்களின் யோகா பயிற்சி நடந்தது. ஏற்பாடுகளை, கன்டோன்மென்ட் வாரியம் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Advertisement