மீனவர்களுக்கு பைபர் படகுகள் மானிய விலையில் வழங்கல்

புதுச்சேரி : புதுச்சேரியை சேர்ந்த மீனவர்களுக்கு 50 சதவீத மானிய விலையில் பைபர் படகுகளை முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.

புதுச்சேரி அரசு, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆண்டுதோறும் மாநில அரசின் திட்டத்தின் கீழ் இயந்திரம் பொருத்தப்படாத பைபர் படகுகளை 50 சதவீத மானிய விலையில் மீனவர்களுக்கு வழங்கி வருகிறது. அந்த வகையில், 2024-25ம் நிதி ஆண்டில் 6 பயனாளிகளுக்கு பைபர் படகுகள் வழங்க தேர்வு செய்யப்பட்டனர்.

இத்திட்டத்துடன், கூடுதலாக 2024-25ம் நிதி ஆண்டிலிருந்து, மீனவர்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப இயந்திரம் பொருத்தக்கூடிய வகையில், உள்ள பைபர் படகுகள் 50 சதவீத மானிய விலையில் வழங்குவதற்கு, 21 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த இரண்டு திட்டங்களின் கீழ் தேர்வு செய்யப்பட்ட புதுச்சேரியை சேர்ந்த 27 மீனவ பயனாளிகளுக்கு பைபர் படகுகள் வழங்கும் நிகழ்ச்சி, கருவடிக்குப்பம், காமராஜர் மணிமண்டபத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு, முதல்வர் ரங்கசாமி தலைமை தாங்கி, மானிய விலையில் பைபர் படகுகளை மீனவர்களுக்கு வழங்கினார்.

இதில், சபாநாயகர் செல்வம், அமைச்சர் லட்சுமிநாராயணன், அரசு கொறடா ஆறுமுகம், பாஸ்கர் எம்.எல்.ஏ., மீன்வளத்துறை செயலர் மணிகண்டன், இயக்குநர் முகமது இஸ்மாயில், இணை இயக்குநர் தெய்வசிகாமணி உள்ளிட்ட துறை அதிகாரிகள், மீனவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Advertisement