கடல் மீன் வர்த்தகம் பாதிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த மீன் விருந்து

பாலக்காடு : அரபிக்கடலில் இரு சரக்கு கப்பல்கள் விபத்துக்கு உள்ளானதால், கடல் மீன் வர்த்தகத்தை வெகுவாக பாதித்துள்ளது.

கடலில் பரவலாக நச்சுப் பொருட்கள் இருப்பதாக பரப்பப்படும் பிரசாரம், கடல் மீன் வர்த்தகத்தில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

அரசு நீர்வாழ் உயிரியல் துறை, மீன்களில் எவ்வளவு நச்சுத்தன்மையும், எண்ணெயும் பரவியுள்ளன என்பது தெரியவில்லை என்றும், மீன் சாப்பிடுவதற்கு முன் நச்சுத்தன்மையை துல்லியமாகப் பதிவு செய்வது சிறந்தது என்றும் மதிப்பிட்டுள்ளது.

அதேபோல் கப்பல் விபத்தால் எண்ணெய் கசிவு ஏற்பட்ட பகுதியில் மீன்பிடிக்க தடை விதித்துள்ளதும் குறிப்பிடப்பட்டது. இதனால், மக்கள் கடல் மீன்கள் வாங்க தயங்குவதாகவும் வியாபாரிகள் கூறுகின்றனர்.

மீன் வியாபாரி யூசப் கூறியதாவது:

மீன்கள் இனபெருக்க காலம் என்பதால், அரபிக்கடலில் மீன் பிடிக்க அரசு தடை விதித்திருந்தது. அதனால், தற்போது கேரளா மற்றும் கர்நாடகாவில் இருந்து கடல் மீன்கள் சந்தைக்கு வருவதில்லை.

பெரும்பாலும் வங்கக் கடலோரங்களான ஆந்திரா மற்றும் தமிழகத்தில் இருந்து மீன்கள் விற்பனைக்கு வருகிறது. பாலக்காட்டில் பொதுவாக மூன்று லோடுக்கும் அதிகமாக விற்பனை நடந்த இடத்தில், தற்போது ஒரு லோடு விற்பனை கூட நடப்பதில்லை. கேரளா கடலோரங்களில் இருந்து சிறு படகுகளின் சென்று பிடித்து வரும் மீன்களும் விற்பனையாவதில்லை.

கடலில் நச்சுப்பொருள் பரவல் என்ற அச்சத்தை தவிர்க்க, பல இடங்களில் விழிப்புணர் முகாம் நடத்தப்படுகிறது.

கடல் மீன்களில் நச்சுத்தன்மை இல்லை, உண்ணக்கூடிய தன்மை கொண்டவை என்பதை மக்களுக்கு உணர்த்த, சில இடங்களில் இலவச மீன் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனாலும், மீன் வர்த்தகம் வெகுவாக பாதித்துள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement