யானை வழித்தடத்தில் மின்வேலி அகற்றும் பணியை... திசை திருப்ப முயற்சி! மாவட்ட நிர்வாகம் கள ஆய்வு செய்தால் விபரம் புரியும்

பந்தலுார்: கூடலுார் வனக்கோட்டத்தில், யானை வழித்தடங்களில் உள்ள சோலார் மின் வேலிகளை அகற்றும் நடவடிக்கைக்கு, ஆக்கிரமிப்பாளர்களுடன் கைகோர்த்துள்ள நபர்களால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தமிழகம், கேரளா, கர்நாடகா வனப்பகுதியின் எல்லையில், கூடலுார் வனக்கோட்டம் அமைந்துள்ளது. இதனால், 3 மாநில யானைகள் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வந்து செல்வது வழக்கம்.

தற்போது, கூடலுார் வனக்கோட்டத்தில் மட்டும், 150-க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளன, அதில், 15 யானைகள் நாள்தோறும் கிராம் பகுதிகளுக்கு வந்து செல்லும் வழக்கத்தை கொண்டுள்ளன.

கடந்த காலங்களில் ஒரு வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானை உள்ளிட்ட வன விலங்குகள், தேயிலை மற்றும் காபி தோட்டங்கள் வழியாக சாலைகளை கடந்து, மறுபகுதி வனத்திற்குள் சென்று வந்தன.

சோலார் மின் வேலிகளால் சிக்கல்



இந்நிலையில், விவசாயத் தோட்டத்தை காப்பாற்றுவதாக கூறி பலரும் சோலார் வேலிகள் அமைத்து உள்ளதால், யானை உள்ளிட்ட வன விலங்குகளின் வழித்தடங்கள் தடைப்பட்டன.

குறிப்பாக, பந்தலுார் அருகே முதுமலை புலிகள் காப்பகம், நெலாக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட பென்னை மற்றும் அதனை சார்ந்த புலிகள் காப்பக பகுதிகளில் இருந்து வெளியேறும் யானைகள், முக்கட்டி பகுதியில் அமைந்துள்ள செக்சன்-17 நிலத்தின் வழியாக வந்து சென்றன.இதனால், கிராமப் பகுதி மக்கள் நிம்மதியாக இருந்தனர். இந்த சூழ்நிலையில், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் சில அதிகாரிகள் ஒத்துழைப்புடன் இந்த பகுதியை ஆக்கிரமித்து விவசாயம் செய்த சில நபர்கள், சுற்றிலும் சோலார் வேலிகள் அமைத்தனர். இதேபோல், கூடலுார், மற்றும் பந்தலுார் சுற்று வட்டார பகுதிகளில் பெரும்பாலான யானை வழித்தடங்கள் மின் வேலிகளால் தடைபட்டுள்ளன.

வனத்துறை வழங்கிய நோட்டீஸ்



இதனால், யானைகள் வேறு வழியின்றி கிராமங்கள் மற்றும் மனிதர்கள் நடந்து செல்லும் சாலைகளில் வருவதை வழக்கமாக கொண்டுள்ளன. இந்நிலையில், பிதர்காடு முதல் சோலாடி வரையிலான செக்சன்- 17 நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள, சோலார் வேலிகளை அகற்ற வனத்துறையினர் சிலருக்கு 'நோட்டீஸ்' வழங்கினர். 'வேலி அகற்றப்பட்டதால், யானைகள் ஊருக்குள் வருவது குறையும்,' என, மக்கள் ஆறுதல் அடைந்தனர்.

இந்நிலையில், 'சோலார் வேலிகளை அகற்ற வேண்டும்,' என, வனத்துறையிடம் தொடர்ந்து வாதிட்ட ஒரு தரப்பினர், யானை வழித்தடங்களில் தடை ஏற்படுத்தி பலரிடம் கைகோர்த்து, 'வன அழிவு, விலங்கு வேட்டை போன்ற சம்பவங்களால் மட்டுமே யானைகள் ஊருக்குள் வருகிறது. சோலார் வேலியால் இல்லை,' என்ற பொய்யான காரணங்களை, சில அரசியல்வாதிகளின் அறிவுரையின் படி எழுதி, முதல்வருக்கு மனுவாக அனுப்பி, வனத்துறை முயற்சிக்கு முட்டுகட்டை போட்டு வருகின்றனர். இது கிராம மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

கூடலுார் வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு கூறியதாவது:

விலங்கு- மனித மோதலை கட்டுப்படுத்துவதற்கான முழு முயற்சியில் வனத்துறை ஈடுபட்டு வருகிறது. உறக்கம் இன்றி, 24 மணி நேரமும் பொதுமக்களை காப்பாற்றுவதற்கு முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில், யானைகள் வழித்தடங்களை உள்ளடக்கிய செக்சன்-17-நிலங்களில் அமைக்கப்பட்டுள்ள சோலார் மின் வேலிகளை அகற்ற, பொதுமக்கள் கொடுத்த புகாரை மையமாக வைத்தே நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. தற்போது, வேலிகளை அகற்ற ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மாவட்ட நிர்வாகத்துடன் ஆலோசனை செய்து, மனித- விலங்கு மோதலை தடுக்கும் வகையில், வன விலங்குகளின் வழித்தடங்களில் உள்ள தடைகள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கும்கி யானைகள் மற்றும் தெர்மல் கேமரா ட்ரோன் உதவியுடன் கிராமங்களுக்குள் வரும் யானைகளை விரட்டும் பணி நடந்து வருகிறது. இந்த சூழ்நிலையில், வனவிலங்குகளின் வழித்தடங்களில் உள்ள தடைகளை அகற்ற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement