கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு அடுத்த மாதம் 18ம் தேதிக்கு ஒத்திவைப்பு

ஊட்டி : கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை அடுத்த மாதம், 18ம் தேதிக்கு, நீதிபதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

கோத்தகிரி கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு, ஊட்டி செசன்ஸ் கோர்ட்டில் மாவட்ட நீதிபதி முரளிதரன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கேரளா மாநிலத்தை சேர்ந்த, குற்றவாளிகளாக கருதப்படும் சயான் மற்றும் ஜித்தன் ஜாய் ஆகியோர் நேரில் ஆஜர் ஆயினர்.

அதேபோல, அரசு தடுப்பு வக்கீல்கள் ஷாஜகான் மற்றும் கனகராஜ் ஆகியோரும், சி.பி.சி.ஐ.டி., ஏ.டி.எஸ்.பி., முருகவேல் தலைமையிலான போலீசாரும் ஆஜராயினர்.

'கோடநாடு கொலை, கொள்ளை நடைபெற்ற எஸ்டேட் பங்களாவில் ஆய்வு நடத்த வேண்டும்,' என, எதிர் தரப்பினர், மனு அளித்த நிலையில், 'புலன் விசாரணை நடந்து வருவதால், இந்த மனு தேவையற்றது,' என, அரசு வக்கீல்கள் வாதிட்டனர். அரசு தரப்பு வக்கீல் ஷாஜகான் நிருபர்களிடம் கூறுகையில், ''கோடநாடு எஸ்டேட் பங்களாவில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என, கடந்த, 2023ம் ஆண்டு, சதீசன், தீபு மற்றும் சந்தோஷ் சாமி ஆகியோர் அளித்த மனு, தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில், 'மீண்டும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்,' என, எதிர்தரப்பு பத்தாவது குற்றவாளியான ஜித்தன் ஜாய் மனு அளித்துள்ளார்.

அதற்கு அரசு தரப்பு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்க வேண்டும் என கூறிய நீதிபதி விசாரணையை அடுத்த மாதம், 18ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்,'' என்றார்.

Advertisement