சுற்றுச்சுவரை சேதப்படுத்திய யானை: அச்சத்தில் பெற்றோர்

கூடலுார், : கூடலுார் அரசு மேல்நிலைப்பள்ளி சுற்றுச்சுவரை காட்டு யானை சேதப்படுத்தியதால் பெற்றோர் அச்சமடைந்துள்ளனர்.

கூடலுார் ஹெல்த் கேம்ப், தனியார் எஸ்டேட் பகுதிகளில், இரவில் உலா வரும் காட்டு யானைகள், விவசாய பயிர்களை சேதப்படுத்தி மக்களை அச்சுறுத்தி வருகின்றன. யானைகள், அவ்வப்போது ஓவேலி சாலைகளிலும் உலா வருகிறது.

நேற்று முன்தினம், அதிகாலை வனச்சோதனை சாவடி அருகே ஓவேலி சாலையில் உலா வந்த காட்டு யானை, அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளி சுற்று சுவரை சேதப்படுத்தி, பள்ளி வளாகத்துக்குள் சென்று, அங்கு பயிரிட்டு இருந்த வாழை மரங்களை சேதப்படுத்தி சென்றது.

அச்சமடைந்துள்ள பெற்றோர் கூறுகையில், 'அரசு பள்ளியை ஒட்டிய சாலை வழியாக இரவில் காட்டு யானைகள் நடந்து சென்றாலும், இதுவரை வளாகத்துக்குள் நுழைந்தது இல்லை.

தற்போது, சுற்றுச்சுவரை சேதப்படுத்தி உள்ளே சென்று வந்திருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

Advertisement