இலங்கை-வங்கதேசம் 'டிரா'

காலே: இலங்கை சென்றுள்ள வங்கதேச அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் காலேயில் நடந்தது. முதல் இன்னிங்சில் வங்கதேசம் 495, இலங்கை 485 ரன் எடுத்தன. நான்காவது நாள் முடிவில் வங்கதேச அணி இரண்டாவது இன்னிங்சில் 177/3 ரன் எடுத்து, 187 ரன் முன்னிலை பெற்றிருந்தது.
ஷாண்டோ சதம்
நேற்று ஐந்தாவது, கடைசி நாள் ஆட்டம் நடந்தது. மழை காரணமாக போட்டி தாமதமாக துவங்கியது. முஷ்பிகுர் 49 ரன்னில் அவுட்டாக, முதல் இன்னிங்சில் (148) அசத்திய கேப்டன் ஷாண்டோ, மீண்டும் சதம் அடித்தார். வங்கதேச அணி இரண்டாவது இன்னிங்சில் 285/6 ரன் எடுத்து 'டிக்ளேர்' செய்தது. ஷாண்டோ (125) அவுட்டாகாமல் இருந்தார்.
அடுத்து 37 ஓவரில் 296 ரன் எடுத்தால் வெற்றி என இரண்டாவது இன்னிங்சை துவக்கியது இலங்கை. துவக்கத்தில் உதாரா (9), நிசங்கா (24) நிலைக்கவில்லை. தனது கடைசி டெஸ்ட் இன்னிங்சில் களமிறங்கிய ஏஞ்சலோ மாத்யூஸ், 8 ரன்னில் அவுட்டானார். சண்டிமாலும் (6) கைவிட, இலங்கை 48/4 என திணறியது.
பின், இலங்கை அணி 72/4 ரன் (32 ஓவர்) எடுத்த போது, போட்டி 'டிரா' ஆனதாக அறிவிக்கப்பட்டது. கேப்டன் டிசில்வா (12), கமிந்து மெண்டிஸ் (12) அவுட்டாகாமல் இருந்தனர்.

Advertisement