யோகாவில் அரசியல் கூடாது தமிழக கவர்னர் ரவி பேச்சு

1

மதுரை: மதுரையில் நடந்த யோகா நிகழ்ச்சியில், கவர்னர் ரவி 51 தண்டால் எடுத்தார்.

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, மதுரையில் தனியார் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் கவர்னர் ரவி பங்கேற்றார். 10,000 மாணவர்கள் பங்கேற்ற அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், ''யோகாவை நமக்கு வழங்கியவர் ஆதியோகியான சிவபெருமான். பதஞ்சலி முனிவரால் யோகா போற்றப்பட்டது. அவரை நினைவுகூர்ந்து, நன்றி செலுத்தும் வகையில் யோகா பயிற்சி மேற்கொள்கிறோம்.

''யோகாவானது பிராந்தியம், மொழிகளுக்கு அப்பாற்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21ல் பகல் பொழுது நீடித்திருக்கும். பூமியில் உள்ள அனைத்து உயிர்களுக்கும், ஆற்றல்களுக்கும் சூரியக்கடவுள் ஆதாரமாக உள்ளார். உடல் நலத்துக்கான யோகாவுடன் அரசியல் கலப்பு கூடாது,'' என்றார்.

இந்நிகழ்ச்சியில், மாணவர்களுக்கு திரிகோணாசனா, புஜங்காசனா, சூரிய நமஸ்காரம் உள்ளிட்ட பல ஆசனங்களை கவர்னர் ரவி பயிற்றுவித்தார்; அதை பார்த்து, மாணவர்கள் யோகா செய்தனர். 'சின்' முத்திரையில் கவர்னர் தியானம் செய்தார்.

தற்போது 73 வயதாகும் ரவி, 51 முறை தண்டால் எடுத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

Advertisement