பேரூராட்சியால் ரோடு சேதம் நெடுஞ்சாலைத் துறை புலம்பல்

உத்தமபாளையம்: உத்தமபாளையத்தில் ஜல்ஜீவன் திட்டத்தில் குழாய் பதிக்க நெடுஞ்சாலைத் துறை ரோடுகளை பேரூராட்சி சேதப்படுத்துவதாக புலம்பி வருகின்றனர்.

உத்தமபாளையம் பேரூராட்சியில் 'ஜல்ஜீவன் திட்டத்தில் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

தெருக்கள், குறுக்கு சந்துகள், ரத வீதிகள், நெடுஞ்சாலைத் துறை ரோடுகள் என அனைத்து பகுதிகளிலும் பள்ளம் தோண்டுகின்றனர். தோண்டிய தெருக்களை பராமரிப்பதும் இல்லை. இதனால் நகரே குண்டும் குழியுமாக உள்ளது.

இந்நிலையில் தேரடியில் இருந்து பஸ் ஸ்டாண்ட் வரையிலும், பைபாஸ் ரோட்டிலும் இதே போன்று குழாய் பதிக்க தோண்டி அரை குறையாக மூடி சென்றனர்.

நெடுஞ்சாலைத் துறை சமீபத்தில் தான் ரோட்டை புதுப்பித்தது. இது குறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் பேசுவதற்காக பேரூராட்சியை அலுவலர்களை தொடர்பு கொண்டால் முறையான பதிலளிப்பதில்லை என புலம்புகின்றனர்.

நெடுஞ்சாலைத் துறையினர் கூறுகையில், 'நெடுஞ்சாலைத் துறை ரோட்டை அனுமதி பெறாமல் பள்ளம் தோண்டியதே தவறு .

ஆனாலும் பொதுமக்கள் நலனுக்கானது என நாங்களும் கண்டு கொள்ளவில்லை. ஆனால் மீண்டும் சரி செய்யுங்கள் என்றால் கண்டு கொள்ளாமல் உள்ளனர்,' என்றனர்.

Advertisement