பள்ளி சுற்றுச்சுவர் சீரமைப்பு தினமலர் செய்தி எதிரொலி

பெரியகுளம்: பெரியகுளம் அருகே தாமரைக்குளம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி நூற்றாண்டை கடந்த பள்ளியாகும். இங்கு 60 மாணவ, மாணவியர்கள் படித்து வருகின்றனர்.

3 ஆசிரியர்கள் உள்ளனர். கடந்தாண்டு பருவமழையின் போது பள்ளியின் வலது பக்கம் உள்ள 15 மீட்டர் நீள சுற்றுச்சுவர் மழைக்கு விழுந்தது. பிற சுவர்களும் எப்போது வேண்டுமானாலும் விழும் அபாய நிலையில் இருந்தது.

சுற்றுச்சுவர் விழுந்த பகுதியில் முள்செடிகளை வெட்டி வேலி அமைத்திருந்தனர்.

இரவில் சிலர் முள்வேலியை தாண்டி பள்ளி வளாகத்தில் மது குடித்துவிட்டு பாட்டில்களை உடைத்து சென்றனர். விரைவில் தடுப்பு சுவர் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.

இதன் எதிரொலியாக ஒன்றிய நிர்வாகம் 30 மீட்டர் சுற்றுச்சுவர் கட்டி முடித்தது.

Advertisement