மலைப்பகுதி மின்பாதையில் இடையூறு; விழிக்குமா மின்வாரியம்

தாண்டிக்குடி: தாண்டிக்குடி மலைப்பகுதி மின் பாதையில் உள்ள இடையூறுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இம்மலைப்பகுதியில் உள்ள 50க்கு மேற்பட்ட மலை கிராமங்களுக்கு கொடைக்கானல் துணைமின் நிலை மூலம் மின்சப்ளை அளிக்கப்படுகிறது சாரல் மழை, சூறைக்காற்று உள்ளிட்ட இயற்கை இடையூறுகளினால் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது.

அடர் வனப்பகுதியில் உள்ள மின் வழித்தடங்களில் உள்ள மரங்கள், மரக்கிளைகள் முறிந்து மின் தடைக்கு காரணமாக உள்ளது.

இடையூறுகளை கண்டறிய தாண்டிக்குடி, பண்ணைக்காடு உதவி மின் பொறியாளர் அலுவலகங்களில் போதிய பணியாளர்கள் இல்லாத நிலையில் தாமதம் ஏற்படுகிறது. இரவு நேரங்களில் ஏற்படும் மின்தடை மறுநாள் மதியத்திற்கு பின்னரே சீர் செய்யும் நிலை உள்ளது.

மின்வாரியத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக மின்தடை செய்யப்படும் நேரத்தில் மின் வழித்தடங்களில் உள்ள இடையூகளை சீர் செய்வதில் பணியாளர்கள் மெத்தனத்தை கடைபிடிக்கின்றனர்.

இத்தகைய நேரங்களில் மின் வழித்தடங்களில் உள்ள இடையூறுகளை களைந்து தடையற்ற மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் .

கொடைக்கானல் மின் சப்ளையில் பாதிப்பு ஏற்படும் இடையே ஒரு நாள் மாற்று சப்ளையான செம்பட்டி, வத்தலக்குண்டு சப்ளை மின்பாதையில் ஏராளமான இடையூறுகள் உள்ளன.

பூலத்துார், பண்ணைக்காடு, தாண்டிக்குடி இடையே மின்பாதையில் ஏராளமான மரங்கள் மின்தடைக்கு காரணமாக உள்ளது.

இது போன்ற இடையூறுகளை மாதந்தோறும் மின்வாரியத்தினர் கண்டறிந்து அகற்றும் பட்சத்தில் மின்தடை சீர் செய்ய முடியும்.

மேலும் ஊத்து பகுதியில் துணை மின் நிலையம் அமைக்கும் பட்சத்தில் இப்பகுதியில் நிரந்தர மின்தடைக்கு தீர்வு ஏற்படும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதை கருதி மின்வாரிய அதிகாரிகள் மின் வழித்தடங்களில் உள்ள இடையூறுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement