பந்தலுாரில் மக்களை அச்சுறுத்தும் யானைகள் கும்கிகள் உதவியுடன் விரட்டும் பணி

பந்தலூர்: பந்தலுார் சுற்றுவட்டாரத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் யானை கூட்டத்தை கும்கிகள் வரவழைக்கப்பட்டு விரட்டப்பட்டு வருகிறது.

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே, பிதர்காடு சுற்று வட்டார பகுதிகளான சந்தக்குன்னு, சோலாடி, முக்கட்டி, கைவட்டா, மானிவயல், பாட்டவயல் உள்ளிட்ட பகுதிகள் முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டி அமைந்துள்ளது.

கிராமங்களில் உலாவுக்கு யானை கூட்டம் பொது மக்களை அச்சுறுத்தி வருவதுடன், விவசாய பயிர்களை சேதப்படுத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளது. கடந்த இரு வாரங்களில் சந்தக்குன்னு, பேபி நகர் பகுதிகளில் இரண்டு பேர் யானை தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

கிராமங்கள், விவசாய தோட்டங்களில் முகாமிட்டு அச்சுறுத்தி வரும் யானை கூட்டத்தை அடர் வனத்திற்குள் விரட்ட வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தினர். முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து கும்கி யானைகள் ஜம்பு, கிருஷ்ணா பிதர்காடு பகுதிக்கு வரவழைக்கப்பட்டது.

நேற்று காலை கூடலூர் வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு உத்தரவைத் தொடர்ந்து, வனச்சரகர் ரவி, வனவர் சுதீர்குமார் தலைமையிலான வனக்குழுவினர் மற்றும் கும்கி யானைகளை கொண்டு பாட்டவயல் முதல் பிதர்காடு வரையிலான பகுதியில் யானைகளின் நடமாட்டம் குறித்து ஆய்வு செய்தனர். தொடர்ந்து, கும்கிகளை கொண்டு குடியிருப்புகள், காபி , தேயிலை மற்றும் மலை காய்கறி தோட்டங்களில் சுற்றித்திரிந்த யானை கூட்டத்தை விரட்டும் பணியை துவக்கினர். கண்காணிப்பு பணி தொடர்வதால் பொதுமக்கள் காலை, இரவு நேரங்களில் வெளியில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும். யானைகள் நடமாட்டம் இருந்தால் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். என, அறிவுறுத்தினர்.

Advertisement