'பீக் ஹவர்சில்' சாம்பல், நிலக்கரி லாரிக்கு தடை விதிக்க கிராமவாசிகள் கோரிக்கை

சோழவரம் : சோழவரம் அடுத்த ஒரக்காடு - அருமந்தை சாலையில், காலை - மாலை நேரங்களில் நிலக்கரி மற்றும் சாம்பல் ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என, கிராமவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு புதுநகரில் இருந்து நிலக்கரி மற்றும் சாம்பல் ஏற்றிச் செல்லும் லாரிகள், ஒரக்காடு - அருமந்தை சாலை வழியாக பயணிக்கின்றன.
நாள் முழுதும் வாகனங்கள் சென்று வருவதால், இந்த வழித்தடத்தில் உள்ள கிராமவாசிகள் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர். குறிப்பாக, காலை - மாலை நேரங்களில், பள்ளி செல்லும் மாணவர்கள், பணிக்கு செல்வோர் அச்சத்தில் செல்கின்றனர். அவ்வப்போது விபத்துகளும், அதனால் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன.
இதுகுறித்து கிராமவாசிகள் கூறியதாவது:
மீஞ்சூர் - வண்டலுார் சாலை மற்றும் சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டோல்கேட் கட்டணங்களை தவிர்க்கவே, இந்த சாலையை லாரிகள் பயன்படுத்துகின்றன.
அவற்றில் அதிக சுமையுடன் நிலக்கரி மற்றும் சாம்பல் ஏற்றிச் செல்லப்படுகிறது.
வேகத்தடைகள், பள்ளங்களை லாரிகள் கடக்கும்போது, குவித்து வைக்கப்பட்டுள்ள சாம்பல் மற்றும் நிலக்கரி சாலையில் சிதறுகின்றன. அவை புழுதியாக மாறி, சுகாதார பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
அதிக சுமையுடன் செல்லும் லாரிகளை கண்காணிக்க வேண்டும். 'பீக் ஹவர்ஸ்' எனப்படும் காலை - மாலை நேரங்களில், இந்த சாலை வழியாக லாரிகள் பயணிப்பதற்கு தடை விதிக்க வேண்டும்.
மேலும், மீஞ்சூர் - வண்டலுார் வெளிவட்ட சாலை வழியாக பயணிக்க அறிவுறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.