சாலை மைய தடுப்புச்சுவர் மீண்டும் அமைக்கப்படுமா?

பொன்னேரி : முதல்வர் வருகையின்போது, மாநில நெடுஞ்சாலையில் பெயர்த்து எடுக்கப்பட்ட சாலை மைய தடுப்பு சுவர்களை, மீண்டும் அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.

பொன்னேரி அடுத்த ஆண்டார்குப்பத்தில், கடந்த ஏப்., 18ல், தமிழக முதல்வர் ஸ்டாலின், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு வந்தார்.

அப்போது, போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்கவும், வாகனங்கள் எளிதாக விழா நடைபெறும் பகுதிக்கு சென்று வருவதற்கு ஏதுவாகவும், தச்சூர் - பொன்னேரி மாநில நெடுஞ்சாலையில், 50 மீட்டர் தொலைவிற்கு, மைய தடுப்புச்சுவர் இடித்து அகற்றப்பட்டது.

விழா முடிந்து இரண்டு மாதங்களான நிலையில், தற்போது வரை மீண்டும் சாலை மைய தடுப்புச்சுவர் அமைக்கப்படாமல் உள்ளது.

எந்தவொரு எச்சரிக்கையும் இல்லாத நிலையில், அப்பகுதியை கடக்கும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

எனவே, விபத்து அசம்பாவிதங்கள் நேரிடும் முன், சாலை மைய தடுப்புச்சுவர்களை மீண்டும் அமைக்க நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:

முதல்வர் வருகைக்காக இரவோடு இரவாக, சாலை மைய தடுப்புச்சுவர்களை அகற்றினர். ஆனால், மீண்டும் அமைப்பதில் நெடுஞ்சாலைத் துறை அலட்சியம் காட்டுகிறது.

தற்காலிக தீர்வு ஏதும் ஏற்படுத்தாமல், நிரந்தமான மைய தடுப்புச்சுவர்களை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement