நெரிசலில் சிக்கிய கலெக்டர் இனியாவது தீர்வு கிடைக்குமா?

ஊத்துக்கோட்டை : வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்ய வந்த கலெக்டரின் கார், ஊத்துக்கோட்டையில் வழக்கமான போக்குவரத்து நெரிசலில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப், நேற்று எல்லாபுரம் ஒன்றியம் கன்னிகாபுரம், குறுவாயல், கன்னிகைப்பேர், மஞ்சங்காரணி, ஊத்துக்கோட்டை பேரூராட்சி ஆகிய பகுதிகளில் நடைபெறும் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்தார்.
அப்போது, ஊத்துக்கோட்டை பஜார் பகுதியில் தொடர் போக்குவரத்து நெரிசல், பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு, சாலையில் சுற்றித் திரியும் மாடுகளால் ஏற்படும் பாதிப்பு உள்ளிட்ட கேள்விகளை செய்தியாளர்கள் கேட்டனர்.
இதற்கு பதில் அளித்த கலெக்டர் பிரதாப், “விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.
பின், நாகலாபுரம் சாலையில் நடைபெறும் கால்வாய் பணிகளை ஆய்வு செய்வதற்காக பஜார் வழியே சென்றபோது, வழக்கமான போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டார்.
பேரூராட்சி ஊழியர்கள் மற்றும் போலீசார் அங்கும், இங்கும் ஓடி போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய முயன்றனர். பின், ஒருவழியாக கலெக்டர் வாகனத்திற்கு வழி ஏற்படுத்தி தந்தனர்.
மதிய நேரத்தில் நெரிசலில் சிக்கிய கலெக்டர், காலை - மாலை நேரங்களில் நெரிசல் எப்படி இருக்கும் என்பதை உணர்ந்து, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.