சங்கர பிரியா மண்டலி குழுவினர் பஜனை போட்டியில் முதல் பரிசு

சென்னை:தமிழ்நாடு பிராமணர் சங்கம், நங்கநல்லுார் கிளை சார்பில், பஜனை போட்டி நேற்று நங்கநல்லுாரில் நடந்தது. லயன் வைத்தியநாதன், மிருனாளினி நாட்டிய அகாடமி தலைவர் மிருனாளினி, இன்னர்வீல் நிர்வாகி சூரியநாராயணன் ஆகியோர், போட்டியை துவக்கி வைத்தனர்.

இதில், நங்கநல்லுார், ஆதம்பாக்கம், வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, 15 குழுவினர் இப்போட்டியில் பங்கேற்றனர். ஒரு குழுவில், 8 பேர். இதில், இரண்டு பேர் வாத்தியம் இசைத்தனர். ஆறு பேர் பாடினர்.

இதில், சங்கர பிரியா பஜனை மண்டலி குழுவினர் முதல் பரிசு பெற்றனர். ஓம்கார் அகாடமி குழுவினர் இரண்டாவது பரிசையும், குருகிருபா பஜனை மண்டலி குழுவினர் மூன்றாம் பரிசையும் பெற்றனர்.

பங்கேற்ற அனைவருக்கும் ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது. 'வித்யா தபஸ்லி' ஸ்ரீநெய்வேலி சந்தானகோபாலன், பல் மருத்துவர் ஜெயகிருஷ்ணன், ஆலந்துார் மண்டலக்குழு தலைவர் சந்திரன் ஆகியோர், அனைவருக்கும் கேடயம், பரிசு வழங்கி சிறப்பித்தனர்.

இது குறித்து, தமிழ்நாடு பிராமணர் சங்க நங்கநல்லுார் கிளை தலைவர் ஜெயராமன் கூறுகையில், ''குழந்தைகளுக்கு ஹிந்து கலாசாரம், பாரம்பரியத்தை விளக்கும் வகையில், ஐந்து ஆண்டுகளாக பஜனை போட்டி நடத்துகிறோம். இதன்வாயிலாக, குழந்தைகளின் தனித்திறன் மேம்படும். பேச்சாற்றல் அதிகரிப்பதுடன், எதிர்கொள்ளும் தைரியம் வளரும்,'' என்றார்.

Advertisement