அனாதையாக விட்டுச்சென்ற மகன் காத்திருக்கும் 80 வயது மூதாட்டி

மாண்டியா : மூதாட்டி ஒருவரை, மகன் காலி வீட்டு மனையில் விட்டு சென்றுள்ளார். மகன் தன்னை அழைத்து செல்ல வருவார் என, நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்.

மாண்டியா மாவட்டம், மலவள்ளி தாலுகாவின், கிருகாவலு கிராமத்தில், 'ஆஸ்ரயா' லே அவுட் உள்ளது. இங்கு இன்னும் வீடுகள் கட்டப்படவில்லை. காலி மனையில் மூன்று நாட்களாக 80 வயது மூதாட்டி வசிக்கிறார். திறந்த வெளியில் குளிரில் நடுங்கியபடி, உணவு, நீர் இன்றி அமர்ந்திருந்தார்.

காலி மனையில் திடீரென மூதாட்டி வசிப்பதை கண்ட அப்பகுதியினர், அவரிடம் சென்று, 'நீங்கள் யார், எங்கிருந்து வந்துள்ளீர்கள். யார் உங்களை விட்டு சென்றது' என, விசாரித்தனர். அப்போது மூதாட்டி, 'என் மகன் அழைத்து வந்தான். என்னை இங்கேயே இருக்க வேண்டும். எங்கும் செல்ல கூடாது. நான் வந்து அழைத்து செல்கிறேன் என கூறி சென்றான். மகனின் வருகைக்காக காத்திருக்கிறேன்' என்றார்.

ஆனால் மூன்று நாட்களாகியும், மகன் வரவில்லை. அப்பகுதியினர் உணவு, நீர் கொடுத்து மூதாட்டியை பராமரிக்கின்றனர். மழை பெய்தால், வீட்டுக்கு அழைத்து செல்கின்றனர்.

மூதாட்டியின் போட்டோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர்.

உறவினர்கள் வந்து அழைத்து செல்லும்படி, வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மூதாட்டியை பற்றி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் நல அதிகாரிகளுக்கு தெரிந்தது.

நேற்று கிராமத்துக்கு வந்த அதிகாரிகள், மூதாட்டியை கிருகாவலு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு சிகிச்சை முடிந்த பின், முதியோர் ஆசிரமத்தில் சேர்க்க, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

இது குறித்து, அதிகாரி கோமல் குமார் கூறியதாவது:

மூதாட்டிக்கு தன்னை பற்றிய விபரங்களை, தெளிவாக கூற தெரியவில்லை. மகன் தன்னை அழைத்து செல்வார் என, நம்பிக்கையுடன் கூறுகிறார்.

மூதாட்டி வழி தெரியாமல், தானாகவே இங்கு வந்தாரா அல்லது வயதாகிவிட்டது என சுமையாக கருதி, மகனே அழைத்து வந்து விட்டு சென்றாரா என்பது தெரியவில்லை.

மூத்த குடிமக்களின் பாதுகாப்புக்காக, பல சட்டங்கள் உள்ளன. மகளிர், குழந்தைகள் நலத்துறை சார்பில், அவர்களுக்கு பல்வேறு சலுகைகள் அளிக்கப்படுகின்றன.

மூதாட்டியை பாதுகாப்போம். தற்போது அவருக்கு கவுன்சலிங் தரப்படுகிறது.

அவரை பற்றி விபரங்கள் தெரியாவிட்டால், முதியோர் இல்லத்தில் அடைக்கலம் அளிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement