குளத்தில் தாய், மகள் பிணம்; கொலை என குற்றச்சாட்டு

தேவனஹள்ளி: தாயும், மகளும் விவசாய குளத்தில் இறந்து கிடந்தனர். இவர்கள் கொலை செய்யப்பட்டதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பெங்களூரு ரூரல் மாவட்டம், தேவனஹள்ளியின், இன்டரசனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ், 35. இவரது மனைவி மாலா, 30. தம்பதிக்கு அனுஸ்ரீ, 8, என்ற மகள் உள்ளார்.

நாகராஜ் குடும்பத்தினருக்கு சொந்தமாக பூர்வீக நிலம் உள்ளது. நிலத்தை பிரித்து, நமது பங்கை பெற்று கொள்ளலாம் என, மாலா கணவரிடம் கூறினார். இதற்கு கணவர் சம்மதிக்கவில்லை.

இதனால், இருவரிடையே மனஸ்தாபம் ஏற்பட்டது. அவ்வப்போது சண்டையும் நடந்தது. நிலத்தில் பங்கு கேட்ட, மாலா மீது கணவர் குடும்பத்தினர் கோபத்தில் இருந்தனர்.

இந்நிலையில் மாலாவும், மகள் அனுஸ்ரீயும் நேற்று காலை, கிராமத்தின் விவசாய குளத்தில் இறந்து கிடந்தனர்.

இதை பார்த்த அப்பகுதியினர், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த விஸ்வநாதபுரா போலீசார், இருவரின் உடல்களை மீட்டனர்.

'கணவர் நாகராஜின் குடும்பத்தினரே, மாலாவையும், மகளையும் கொன்று குளத்தில் போட்டு உள்ளனர்' என, அவரது பெற்றோர் குற்றம்சாட்டினர்.

இது குறித்து, போலீசாரும் விசாரிக்கின்றனர்.

Advertisement