வீட்டுவசதி துறையில் ரூ.2,137 கோடி ஊழல் சி.பி.ஐ., விசாரணை கேட்கிறார் அசோக்

மாண்டியா : மாண்டியாவில் எதிர்க்கட்சி தலைவர் அசோக் நேற்று அளித்த பேட்டி:

பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கீடு செய்வதற்கு லஞ்சம் வாங்கப்படுவதாக, காங்கிரஸ் எம்.எல்.ஏ., பி.ஆர்.பாட்டீல் கூறியது 100 சதவீத உண்மை. அவரது குரலை ஒடுக்க காங்கிரசில் முயற்சி நடக்கிறது. வீட்டு வசதி துறையில் 2,137 கோடி ரூபாய் ஊழல் நடந்து உள்ளது.

இதுபற்றி சி.பி.ஐ., விசாரணைக்கு அரசு உத்தரவிட வேண்டும். ஏழைகள் வீடுகளில் திருடிய காங்கிரஸ், இதற்கு பதில் சொல்ல வேண்டும். ஊழல் நடந்தாலும் சித்தராமையா மவுனமாக உள்ளார். ஏழைகள் பணத்தை கொள்ளை அடிப்பதற்காக அவர் வெட்கப்பட வேண்டும்.

தேர்தலில் ஓட்டுகளை பெற, கர்நாடகாவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு காங்கிரஸ் தங்குமிடம் வழங்குகிறது. நான் சொல்வது பொய் என்றால் இதுபற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும். இங்கு நடப்பது காங்கிரஸ் அரசு இல்லை; திப்பு சித்தாந்த அரசு.

கே.ஆர்.எஸ்., அணையில் காவிரி ஆரத்தி நடத்தி, அணையை சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு தொந்தரவு கொடுக்க பார்க்கின்றனர். காவிரி ஆரத்திக்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளதாக கூறுகின்றனர். இதில் 40 கோடி ரூபாய் செலவு செய்து விட்டு, மீதம் 60 கோடி ரூபாயை, 'ஆட்டை' போட பார்க்கின்றனர். அரசின் ஊழலுக்கு எதிராக எங்கள் போராட்டம் தொடரும்.

கர்நாடக மக்கள் பணத்தை கொள்ளை அடித்து, காங்கிரஸ் மேலிடத்திற்கு கருப்பு பணமாக கொடுக்கின்றனர். ஒவ்வொரு துறையிலும் ஊழல் பெருகி வருகிறது. மற்ற மாநில தேர்தலுக்காக, கர்நாடகாவின் பணம் அனுப்பி வைக்கப்படுகிறது.

ஊழல் செய்யும் அமைச்சர்கள் பதவியில் தொடர்கின்றனர். சித்தராமையாவுக்கு மானம், மரியாதை இருந்தால் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான அமைச்சர்களை ராஜினாமா செய்ய சொல்ல வேண்டும்.

இவ்வாறு கூறினார்.

Advertisement