பெங்களூரில் 75 சந்திப்புகள் மேம்பாடு: ரூ.100 கோடியில் மாநகராட்சி திட்டம்
பெங்களூரு : பெங்களூரில் வாகன பயணியர் மற்றும் பாதசாரிகளின் பாதுகாப்பை மனதில் கொண்டு, நகரின் 75 சந்திப்புகளுக்கு புது வடிவம் கொடுக்க, மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்காக 100 கோடி ரூபாய் செலவிடவுள்ளது.
இது குறித்து பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
பெங்களூரில் வாகனங்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இதன் விளைவாக விபத்துகளும், உயிரிழப்பும் நடக்கின்றன. விபத்துகளில் இருந்து வாகன பயணியரையும், பாதசாரிகளையும் காப்பாற்றும் நோக்கில், சந்திப்புகளின் வடிவத்தை மாற்றியமைக்க மாநகராட்சி திட்டம் வகுத்துள்ளது.
சுரக்ஷா மிஷன்
கர்நாடக அரசு மற்றும் பெங்களூரு மாநகராட்சியின், 2023 - 24ம் ஆண்டு பட்ஜெட்டில், சந்திப்புகளை மேம்படுத்த 'சுரக்ஷா மிஷன் - 75' திட்டம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தை 2023ன் மார்ச் 27ம் தேதி அன்றைய முதல்வர் பசவராஜ் பொம்மை துவக்கி வைத்தார்.
அதன்பின் சட்டசபை தேர்தல் நடந்ததால், திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இரண்டரை ஆண்டுகளுக்கு பின், தற்போது பணிகளை துவக்க தயாராகிறோம். திட்டத்துக்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு மாநகராட்சியின், எட்டு மண்டலங்களில் 75 சந்திப்புகளை மேம்படுத்தும் திட்டம் இதுவாகும். விபத்துகள் அதிகம் நடக்கும், போக்குவரத்து அதிகம் இருக்கும் சந்திப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 15 பேக்கேஜ்களாக பிரித்து, டெண்டர் முடிவு செய்யப்பட்டது. டெண்டர் பெற்றவர்களுக்கு பணி உத்தரவு கடிதமும் அளிக்கப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் துவங்கப்படும்.
காற்று மாசு
சில சந்திப்புகளில், பாதசாரிகள் சாலையை கடக்க பெரும் அவதிப்படுகின்றனர். இரண்டு புறத்திலும் வேகமாக செல்லும் வாகனங்களுக்கு இடையே சாலையை கடப்பது அபாயமானது. போக்குவரத்து நெருக்கடியுடன், காற்று மாசும் அதிகரிக்கிறது. சாக்கடைகளின் மீது வாகனங்கள் செல்வதால், சாக்கடை மூடிகள் உடைகின்றன. இது மக்களின் உயிருக்கு ஆபத்தானது. இதற்கு தீர்வு காண, சந்திப்பு பகுதிகள் மேம்படுத்தப்படும்.
சந்திப்புகளின் வடிவம் மாற்றி அமைக்கப்படும். சாக்கடைகளில் மண், குப்பையை அள்ளி சுத்தம் செய்யப்படும். ஆங்காங்கே இருக்கைகள் அமைக்கப்படும். போக்குவரத்து விதிகளை குறிக்கும் போர்டுகள் வைப்பது, அழகான மின் விளக்குகள் அலங்காரம் செய்வது உட்பட பல பணிகள் நடத்தப்படும். செயற்கை நீர் வீழ்ச்சிகள் அமைக்கப்படும். சுற்றிலும் அலங்கார பூச்செடிகள் நட்டு, பசுமையாக்கி சந்திப்புகள் அழகாக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும்
-
ஈரானில் 6 விமான நிலையங்களில் தாக்குதல்; 15 போர் விமானங்களை அழிப்பு; இஸ்ரேல் அறிவிப்பு
-
மாம்பழம் கொள்முதல்; தமிழக அரசு மீது அன்புமணி குற்றச்சாட்டு
-
இந்தியாவிற்கு மிகப்பெரிய சொத்து: பிரதமர் மோடிக்கு சசி தரூர் பாராட்டு
-
கேரளாவில் காங்கிரஸ்... குஜராத்தில் பா.ஜ., ; 4 மாநில இடைத்தேர்தல் முடிவுகள்
-
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் எதிரொலி; சென்செக்ஸ் சரிவு!
-
கலந்தாய்வுக்கு முன்னரே நிரம்புது ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள்; தென் மாவட்டங்கள் 'பிஸி'