தனியார் மருத்துவமனையில் நடந்த ஆப்பரேஷனில் பெண்கள் பாதிப்பு

விஜயநகரா: தனியார் மருத்துவமனை டாக்டரின் அலட்சியத்தால், குழந்தை பிரசவித்த பெண்கள் பல்வேறு பிரச்னைகளால் அவதிப்படுகின்றனர்.

விஜயநகரா மாவட்டம், ஹொஸ்பேட் நகரில், தனியார் மருத்துவமனை உள்ளது. பிரசவத்துக்காக ஆப்பரேஷன் செய்து கொண்ட பெண்கள், பாதிப்படைந்து உள்ளனர்.

ஆப்பரேஷன் செய்த இடத்தில் சீழ் வடிகிறது. சிலருக்கு கர்ப்பப்பையை அகற்ற வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகி உள்ளனர்.

சண்டூரில் வசிக்கும் ஸ்ருஜன் என்பவர், கடந்தாண்டு தன் மனைவியை பிரசவத்துக்காக இந்த மருத்துவமனையில் சேர்த்தார். இவருக்கு மகப்பேறு டாக்டர், ஆப்பரேஷன் செய்தார். நான்கு நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொண்டு, மனைவியை, ஸ்ருஜன் வீட்டுக்கு அழைத்து வந்தார்.

ஒரு வாரத்துக்கு பின், ஆப்பரேஷன் செய்த இடத்தில் சீழ் வடிய துவங்கியது. உடனடியாக மனைவியை, அதே மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். ஆனால் டாக்டர், சரியாக சிகிச்சை அளிக்கவில்லை; வலி அதிகரித்தது.

எனவே வேறு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஸ்ருஜனின் மனைவிக்கு சுகாதாரம் அற்ற முறையில் ஆப்பரேஷன் நடந்துள்ளது.

இதனால் பிரச்னை என்பதை கண்டுபிடித்தார். அதன்பின் அங்கு சிகிச்சை பெற்று குணம் அடைந்தார். ஸ்ருஜனின் மனைவி மட்டுமல்ல, இது போன்று 13 பெண்கள், பாதிக்கப்பட்டு உள்ளனர்.

எனவே மருத்துவமனை டாக்டர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவமனையின் உரிமத்தை ரத்து செய்யும்படி வலியுறுத்தல் எழுந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பத்தினர், மாவட்ட மருத்துவ அதிகாரி சங்கர் நாயக்கிடம் புகார் செய்தனர்.

இதை தீவிரமாக கருதிய அவர், நான்கு டாக்டர்கள் கொண்ட குழுவை அமைத்துள்ளார். இந்த குழுவினர், அந்த மருத்துவமனைக்கு சென்று, ஆய்வு செய்வர். அறிக்கை வந்த பின், மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க, அதிகாரி முடிவு செய்துள்ளார்.

Advertisement