எதிரி மிகப்பெரிய தவறு செய்துவிட்டார்: ஈரான் தலைவர் கமேனி காட்டம்

15


டெஹ்ரான்: ''எதிரி மிகப்பெரிய தவறு செய்துவிட்டார்'' என ஈரான் தலைவர் அயதுல்லா அலி கமேனி குற்றம் சாட்டி உள்ளார்.

ஈரான் - இஸ்ரேல் இடையே, 10 நாட்களாக சண்டை நடக்கிறது. இரு நாடுகளிலும் உள்ள இந்தியர்கள், அமெரிக்கர்கள் அவசரமாக சொந்த நாட்டுக்கு திரும்புகின்றனர். 'அணு ஆயுதம் தயாரிக்கும் திட்டத்தை ஈரான் முற்றிலுமாக கைவிடாத வரையில், போரை நிறுத்த மாட்டோம்' என்று இஸ்ரேல் கூறுகிறது.



ஈரானின் போர்டோ, இஸ்பஹான், நடான்ஸ் ஆகிய 3 அணு சக்தி நிலையங்களில் அமெரிக்கா தாக்குதல் நடத்தி உள்ளது. இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் களம் இறங்கியதால், மேற்கு ஆசிய பிராந்தியம் மட்டுமின்றி, உலகம் முழுவதும் கவலை ஏற்பட்டுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது.



இந்நிலையில், சமூக வலைதளத்தில் ஈரான் தலைவர் அயதுல்லா அலி கமேனி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: தண்டனை தொடர்கிறது. எதிரி மிகப்பெரிய தவறு செய்துவிட்டார். எதிரி கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டியவர். அதற்கு நேரம் வந்துவிட்டது. இப்போது அவர் தண்டிக்கப்படுவார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement