மாவட்டத்தில் புதிதாக 22 துணை சுகாதார நிலையங்கள் அமைக்கும் பணிகள் துவக்கம்

விருதுநகர்: விருதுநகர், சிவகாசி சுகாதார மாவட்டங்களில் புதிதாக 22 துணை சுகாதார நிலையங்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் தற்போது துவங்கி நடந்து வருகிறது.

விருதுநகர் சுகாதார மாவட்டத்தில் 2 நகர, 20 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 114 துணை சுகாதார நிலையங்கள் உள்ளது. சிவகாசி சுகாதார மாவட்டத்தில் 5 நகர, 31 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 162 துணை சுகாதார நிலையங்கள் உள்ளது.

சட்டசபையில் மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் 10 ஆயிரம் மக்கள் தொகைக்கும் அதிகமாக உள்ள பகுதிகளில் தேவைக்கு ஏற்ப 642 நகர், துணை சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும் என அமைச்சர் சுப்பிரமணியன் அறிவித்தார்.

தமிழகத்தில் கடந்த 25 ஆண்டுகளாக துணை சுகாதார நிலையங்களின் எண்ணிக்கை உயர்த்தப்படாமல் இருந்தது. ஆனால் மக்கள் தொகை தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதற்கு தகுந்தாற் போல கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை.

இதனால் பணியாளர்கள் பணிச்சுமைக்கு மத்தியில் பணிபுரிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதையடுத்து தற்போது மாநிலம் முழுவதும் நகர், துணை சுகாதார நிலையங்கள் தேவைக்கு ஏற்ப மாவட்டம் வாரியாக கூடுதலாக அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக 22 துணை சுகாதார நிலையங்கள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் விருதுநகர் சுகாதார மாவட்டத்தில் சூலக்கரை, காரியாபட்டி, கூரைக்குண்டு, கே. செவல்பட்டி, அல்லம்பட்டி, கோட்டைப்பட்டி ஆகிய பகுதிகளில் கூடுதலாக துணை சுகாதார நிலையங்கள் அமைக்கப்படவுள்ளது.

சிவகாசி சுகாதார மாவட்டத்தில் முத்துராமலிங்கபுரம், மேட்டமலை, எஸ்.ஆர்.,நாயுடு நகர், அய்யம்பட்டி, கீழச்செல்லையாபுரம், சுந்தரநாச்சியார்புரம், தென்றல்நகர், மேலுார் துரைச்சாமிபுரம், சேத்துார் வலையர் தெரு, முத்துச்சுப்பையாபுரம், அம்மையப்பபுரம், வாகைக்குளம்பட்டி, டீச்சர்ஸ் காலனி, கலங்காப்பேரி, மாதா நகர், கொத்தன் குளம் உள்ளிட்ட பகுதிகளில் கூடுதலாக துணை சுகாதார நிலையங்கள் அமைக்கப்படவுள்ளது.

Advertisement