ஜூலை மாதம் பெங்களூரில் உள்ளாடைகள் கண்காட்சி

திருப்பூர்: பெங்களூரில் நடைபெற உள்ள உள்ளாடைகளுக்கான பிரத்யேக கண்காட்சியில் பங்கேற்க, திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.

கர்நாடகா உள்ளாடை உற்பத்தியாளர் சங்கம் (கியா), உள்ளாடை வர்த்தகத்தை மேம்படுத்தும் நோக்குடன், பிரத்யேக கண்காட்சி நடத்தி வருகிறது.

பிரத்யேகமான நான்காவது கண்காட்சி, பெங்களூரு பேலஸ் கிரவுண்ட் பகுதியில் உள்ள காயத்ரி விஹார் சாகர் கண்காட்சி அரங்கில், ஜூலை 22ல் துவங்கி மூன்று நாட்கள் நடக்கிறது.

திருப்பூர் உற்பத்தியாளர்கள், கண்காட்சியில் பங்கேற்று பயன் பெறுமாறு, கண்காட்சி அமைப்பாளர்கள் நேரில் அழைப்பு விடுத்தனர்.

தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம் (சைமா) துணை தலைவர் பாலசந்தர் கூறியதாவது:

இக்கண்காட்சி மூலம் 'பிராண்டு' உருவாக்கம் ஊக்குவிக்கப்படுகிறது. தேசிய அளவிலான வர்த்தக நிறுவனங்கள் பங்கேற்பதால், திருப்பூரின் சிறப்பான உற்பத்தியை நாடு முழுதும் கொண்டு சேர்ப்பதும் எளிதாகும்.

இக்கண்காட்சியை, திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்கள் சரிவர பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்திஉள்ளோம்.

'சைமா' உறுப்பினர்களும், முன்னணி நிறுவனத்தாரும், கண்காட்சியில் பங்கேற்க ஆர்வத்துடன் ஆயத்தமாகி வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement