அஜய் வாண்டையார் கும்பல் அட்டூழியம் 22 பேர் கைது ; 5 பேருக்கு குண்டாஸ் சென்னை மாநகர போலீசார் அறிக்கை:

அ.தி.மு.க., தொழில்நுட்ப பிரிவு நிர்வாகியாக இருந்த பிரசாத் வீட்டில் சோதனை செய்தபோது, முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அவற்றையும், அவரது வங்கி கணக்குகளையும், ஆய்வு செய்ததில், அவர் 200 பேரிடம், அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, இரண்டு கோடி ரூபாய் வரை மோசடி செய்திருப்பது தெரிய வந்தது.

இதற்கு, மதுரையை சேர்ந்த ஆயுதப்படை ஏட்டு செந்தில் உடந்தையாக இருந்துள்ளார்.

மேலும், தனிப்பட்ட நபர்களின் மொபைல் போன் தகவல்களை பெற்று, மிரட்டி பணம் பறித்துள்ளார். இதற்கு உதவிய, இரண்டு எஸ்.ஐ.,க்களிடம் விசாரணை நடக்கிறது.

பிரசாத், பெங்களூரில் தங்கி இருந்த பிரதீப் குமார், 38, கானா நாட்டை சேர்ந்த ஜான், 38 உள்ளிட்டோரிடம், மூன்று ஆண்டுகளாக கோகைன் எனும் போதைப்பொருள் வாங்கி, தனக்கு தெரிந்த நண்பர்களுக்கு விற்றுள்ளார்.

இவரிடம் போதைப்பொருள் பெற்று பயன்படுத்திய நடிகர் ஸ்ரீகாந்த், கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக உள்ள நபர்கள் கைது செய்யப்படுவர்.

பிரசாத்தின் நண்பர் அஜய் வாண்டையார், நில உரிமையாளர்களை மிரட்டியும், வெளிநாடுகளில் வசிப்போருக்கு சொந்தமான நிலத்தை, போலி ஆவணங்கள் தயாரித்தும் அபகரித்துள்ளார். இது குறித்து விசாரணை நடக்கிறது.

இவ்வழக்கில், இதுவரை கட்டப்பஞ்சாயத்து, நிலம் அபகரிப்பு, வேலைவாய்ப்பு மோசடி, போதைப்பொருள் விற்பனை தொடர்பாக, 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில், ஐந்து பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் கடத்துவது, வைத்திருப்பது, உட்கொள்வது தண்டனைக்குரிய குற்றம். போதைப்பொருள் வைத்திருப்போர் குறித்து தகவல் தெரிந்தும், போலீசாருக்கு தெரிவிக்காமல் இருப்பதும் குற்றமாகக் கருதப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement