சொதப்பியது பவுலிங்.. லீட்ஸ் டெஸ்டில் இந்தியா அணி பரிதாப தோல்வி

லீட்ஸ்: லீட்ஸ் டெஸ்டில் இந்தியாவின் கனவுக்கு பென் டக்கெட் வேட்டு வைத்தார். இவரது சதம் கைகொடுக்க, இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
கேப்டன் சுப்மன், ஜெய்ஸ்வால், ராகுல், ரிஷாப் (2) என 5 சதம் அடித்தது, பும்ரா 5 விக்கெட் (முதல் இன்னிங்ஸ்) வீழ்த்தியது, வலுவான இலக்கு நிர்ணயித்தது எல்லாம் வீணானது. பல 'கேட்ச்'களை கோட்டைவிட்டது. நேற்றைய முதல் 'செஷனில்' பவுலர்கள் சொதப்பியது போன்றவை இந்திய தோல்விக்கு காரணமாக அமைந்தன.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ('ஆண்டர்சன்-சச்சின்' டிராபி) பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் லீட்சில் உள்ள ஹெடிங்லி மைதானத்தில் நடந்தது. முதல் இன்னிங்சில் இந்தியா 471, இங்கிலாந்து 465 ரன் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் இந்தியா 364 ரன் எடுக்க, இங்கிலாந்துக்கு 371 ரன் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. நான்காவது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 21/0 ரன் எடுத்து, 350 ரன் பின்தங்கியிருந்தது.
வலுவான அடித்தளம்
நேற்று ஐந்தாவது நாள் ஆட்டம் நடந்தது. டக்கெட், கிராவ்லே விவேகமாக விளையாடினர். பும்ராவுக்கு எதிராக 'ரிஸ்க்' எடுக்க கூடாது; மற்ற இந்திய பவுலர்களை விளாச வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர். இதற்கு ஏற்ப மற்ற 'வேகங்கள்' ஆரம்பத்தில் தடுமாறினர். இந்திய பவுலிங் பயிற்சியாளர் மார்னே மார்கல், பவுண்டரி அருகே வந்து 'அட்வைஸ்' செய்யும் நிலை ஏற்பட்டது. ஜடேஜாவின் 'சுழலும்' எடுபடவில்லை. முக்கியமான முதல் 'செஷனில்' இங்கிலாந்து அணி ஓவருக்கு 4 ரன் வீதம் 96 ரன் எடுத்து, ஆதிக்கம் செலுத்தியது. உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து 117/0 ரன் எடுத்திருந்தது.
ஜெய்ஸ்வால் 'மிஸ்'
இதற்கு பின் ஜடேஜா ஓவரில் 2 பவுண்டரி அடித்து ஸ்கோரை உயர்த்தினார் டக்கெட். சிராஜ் பந்தில் டக்கெட் (97 ரன்னில்) கொடுத்த 'கேட்ச்சை' எல்லையில் இருந்து ஓடி வந்து பிடிக்க முற்பட்ட ஜெய்ஸ்வால் கோட்டைவிட்டார். இது இந்த டெஸ்டில் ஜெய்ஸ்வால் 'மிஸ்' செய்த நான்காவது 'கேட்ச்'. ஜடேஜா பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய டக்கெட், டெஸ்டில் 6வது சதம் அடித்தார்.
நழுவிய 'ஹாட்ரிக்'
இங்கிலாந்து அணி 181/0 ரன் எடுத்திருந்த போது மழை குறுக்கிட, ஆட்டம் நிறுத்தப்பட்டது. 22 நிமிட தாமதத்திற்கு பின் போட்டி மீண்டும் துவங்கியது. பிரசித் கிருஷ்ணா 'வேகத்தில்' கிராவ்லே (65) அவுட்டானார். தொடர்ந்து அசத்திய கிருஷ்ணா பந்தில் போப் (8) போல்டானார். ஜடேஜா பந்தில் 'ஸ்விட்ச் ஹிட்' மூலம் சிக்சர் அடித்தார் டக்கெட். இந்த நேரத்தில் பந்துவீச வந்த ஷர்துல் தாகூர் (55வது ஓவர்) மிரட்டினார். 3வது பந்தில் டக்கெட்டை (149, 21x4, 1x6) அவுட்டாக்கினார். 4வது பந்தில் புரூக்கை (0) வெளியேற்றினார். அடுத்த பந்தில் கேப்டன் ஸ்டோக்ஸ் 3 ரன் எடுக்க, 'ஹாட்ரிக்' வாய்ப்பு நழுவியது. தேநீர் இடைவேளையின் போது இங்கிலாந்து அணி 269/4 ரன் எடுத்திருந்தது.
மீண்டும் மழை பெய்ய, ஆட்டம் துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. மழை நின்றதும், ஆட்டம் ஆரம்பமானது. ஜடேஜா 'சுழலில்' ஸ்டோக்ஸ் (33) சிக்கினார்.
ஜோ ரூட் அரைசதம்
அனுபவ ஜோ ரூட், ஜேமி ஸ்மித் பொறுப்பாக ஆடினர். அரைசதம் கடந்த ரூட், அணியை கரை சேர்த்தார். ஜடேஜா ஓவரில் (82) ஒரு சிக்சர், பவுண்டரி அடித்த ஸ்மித், கடைசி பந்தையும் சிக்சருக்கு அனுப்பி வெற்றியை உறுதி செய்தார். இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 373/5 ரன் எடுத்து வென்றது. தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது. ரூட் (53), ஸ்மித் (44) அவுட்டாகாமல் இருந்தனர்.
@facebook@facebook
மேலும்
-
ஒருமுறை பயன்படுத்திய எண்ணெய்யை பயோடீசல் தயாரிக்க வழங்குக கலெக்டர் அறிவுறுத்தல்
-
மின் வெட்டை கண்டித்து தீப்பந்தம் ஏந்தி போராட்டம்
-
கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ரூ. 2.80 லட்சம் காப்பர் திருட்டு
-
கஞ்சா வழக்கு ரவுடிக்கு ஓராண்டு தடுப்பு காவல்
-
இன்றைய நிகழ்ச்சி
-
சுகாதார நிலையங்களில் ஆய்வுக்கு தேசிய தரச் சான்று குழு வருகை