புதுச்சேரி நபரிடம் ரூ.8.37 லட்சம் மோசடி

புதுச்சேரி : போலி பங்குச்சந்தையில் முதலீடு செய்து புதுச்சேரி நபர் ரூ.8.37 லட்சத்தை மோசடி கும்பலிடம் இழந்தார்.

முருங்கப்பாக்கத்தை சேர்ந்த நபரை தொடர்பு கொண்ட மர்ம நபர், ஆன்லைன் பங்குச்சந்தையில் முதலீடு செய்வது தொடர்பான, வாட்ஸ் ஆப் குரூப்பில் அவரை இணைத்துள்ளார். அதில், பங்குச்சந்தையில் எவ்வாறு முதலீடு செய்வது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதை நம்பிய அவர் மர்ம நபர் தெரிவித்த பங்குச்சந்தையில் 8 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்துள்ளார். அதன் மூலம் வந்த லாபப் பணத்தை எடுக்க முயன்றபோது, முடியவில்லை. அதன்பிறகே, போலி பங்குச் சந்தையில் முதலீடு செய்து மோசடி கும்பலிடம் பணத்தை இழந்தது தெரியவந்தது.

இதேபோல், வில்லியனுாரை சேர்ந்த பெண் ஒருவரை தொடர்பு கொண்ட மர்ம நபர், குறைந்த வட்டியில் 2 லட்சம் வரை லோன் தருவதாக கூறி 16 ஆயிரத்து 499 ரூபாய் ஏமாற்றியுள்ளார்.

புகாரின் பேரில், புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement