சமுதாயக்கூடம் இல்லை, பள்ளியை தரம் உயர்த்த வேண்டும் அவதியில் முத்தனேரி குடியிருப்போர்

நரிக்குடி: சமுதாயக்கூடம் இல்லாததது, பள்ளி கட்டடம் சேதமடைந்திருப்பது, முழு நேர ரேஷன் கடை இல்லாதது, பள்ளியை தரம் உயர்த்தாததால் நீண்ட தூரம் சென்று படிக்கும் மாணவர்கள் உடல் சோர்வடைவது என பல்வேறு பிரச்னைகளால் நரிக்குடி முத்தனேரி குடியிருப்போர் சிரமத்தில் உள்ளனர்.

நரிக்குடி முத்தனேரி குடியிருப்போர் கணேஷ், தாயம்மாள், முத்துராமன், வேல்முருகன், முரளிதரன், அறிவொளி, ராஜா ஆகியோர் கூறியதாவது: ஏழை, எளிய மக்கள் வீடுகளில் போதிய வசதி இல்லாததால் விசேஷ நிகழ்ச்சிகள் நடத்த பெரிதும் சிரமப்படுகின்றனர். சமுதாயக்கூடம் கட்ட வேண்டி பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. சமுதாயக்கூடம் ஏற்படுத்தித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பகுதி நேர ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. குறிப்பிட்ட நாட்களுக்குள் பொருட்கள் வாங்க வேண்டும். ஒரு சிலர் வாங்க முடியாமல் போனால் பொருட்கள் கிடைப்பது சிரமம். அனைத்து பொருட்களையும் தேவையான நேரங்களில் வாங்குவதற்கு ஏதுவாக முழு நேர ரேஷன் கடையாக மாற்ற வேண்டும். பள்ளி கட்டடம், சுற்று சுவர் சேதம் அடைந்து உள்ளது.

ஒரு கட்டடம் ஓடு வேயப்பட்ட பழைய கட்டடமாக உள்ளது. எப்போது இடிந்து விழுமோ என மாணவர்கள் அச்சத்தில் படிக்கின்றனர். சுற்றுச்சுவர் இல்லாததால் சமூக விரோத செயல்கள் நடக்கிறது. பள்ளி கட்டடத்தையும் சுற்றுச்சுவரையும் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். நாடக மேடை, பொது நிகழ்ச்சி நடக்கும் மந்தையில் கழிவு நீர், மழை நேரங்களில் சேறும், சகதியுமாக உள்ளது.

பெரும்பாலான வீதிகள் மண் ரோடாக உள்ளது. சேறும், சகதியுமாக இருப்பதால் நடமாட முடியவில்லை. பேவர் பிளாக் கற்கள் பதிக்க வேண்டும்.கண்மாய் துார்வாரி பல ஆண்டுகள் ஆகிறது. மழை நேரங்களில் தண்ணீரை சேமிக்க முடியவில்லை. துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். இங்குள்ள மாணவர்கள் உயர்கல்வி படிக்க நரிக்குடி, திருச்சுழி உள்ளிட்ட ஊர்களுக்கு நீண்ட துாரம் சென்று வருகின்றனர்.

நீண்ட தூரம் சென்று வருவதால் உடல் சோர்வு ஏற்பட்டு சிரமத்திற்கு ஆளாகின்றனர். இங்குள்ள நடுநிலைப் பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியை உயர் நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

Advertisement