சிவகாசி ஒன்றியத்தில் தாமிரபரணி குடிநீர் வினியோகம் இல்லை மக்கள் அவதி

சிவகாசி : சிவகாசி ஒன்றியத்தில் ஊராட்சிகளில் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் முழுமையாக வினியோகம் செய்யாததால் மக்கள் அவதிப்படுகின்றனர்.

சிவகாசி ஒன்றியத்தில் 54 ஊராட்சிகள் உள்ளன. அனைத்து ஊராட்சிகளுக்கும் குடிநீர் வினியோகம் செய்வதற்காக 2019 ல் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டம் துவங்கப்பட்டது. இத்திட்டத்தின்படி ஊராட்சிகளில் மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டு குழாய் இணைப்பு கொடுக்கப்பட்டு குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். ஆனால் கூட்டு குடிநீர் திட்டப்பணிகள் ஓரளவிற்கு முடிந்த நிலையில் கிராமங்களில் குடிநீர் வினியோகம் முழுமையாக இல்லை. ஒரு சில ஊராட்சிகளில் தற்போது வரையிலும் மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டும்பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஒரு சில ஊராட்சிகளில் தொட்டி கட்டப்பட்டும் குடிநீர் ஏற்றவில்லை.

மேலும் ஒன்றியத்தில் ஒரு ஊராட்சியில் 30 மேல்நிலை குடிநீர் தொட்டிகள் இருந்தால் அங்கு 5 முதல் 8 தொட்டிகளுக்கு மட்டுமே குடிநீர் ஏற்றப்படுகிறது. மற்ற தொட்டிகளில் உள்ளூர் போர்வெல் மூலம் மட்டுமே தண்ணீர் ஏற்றப்படுகிறது. இதனால் கிராம மக்கள் குடிநீர் பற்றாக்குறையால் அவதிப்படுகின்றனர். எனவே கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் அனைத்து ஊராட்சிகளிலும் அனைத்து தொட்டிகளுக்கும், குடிநீர் ஏற்றப்பட்டு வினியோகம் செய்ய வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement