ஊடுபயிராக கஞ்சா சாகுபடி: கொடை ரோடு அருகே விவசாயி கைது

திண்டுக்கல்: கொடைரோடு அருகே, தோட்டத்தில் கஞ்சா விவசாயத்தில் ஈடுபட்ட விவசாயி கைது செய்யப்பட்டார்.


திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அடுத்த, ஒருத்தட்டு கிராமம் அருகே செண்டு மல்லி, ரோஸ் உள்ளிட்ட பூக்களை சாகுபடி செய்து வருபவர் விவசாயி நாகராஜன் (60). இவரது தோட்டத்தில் பயிரிட்டுள்ள பூக்கள் மற்றும் வாழை மரங்களுக்கு மத்தியில் கஞ்சா செடி செடிகளை ஊடுபயிராக விவசாயம் செய்து வந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. அந்தக் கஞ்சா செடிகள் சுமார் 6 அடி உயரம் வரை செழித்து வளர்ந்துள்ளது.


செண்டு மல்லி செடி போன்று இருந்ததால், அருகில் இருந்த மற்ற விவசாயிகளுக்கு அது கஞ்சா செடி என, சந்தேகம் ஏற்படவில்லை. ஆனால், அந்த கஞ்சா செடி தற்போது சுமார் 6 அடி உயரத்திற்கு செழித்து மலர்ந்து இருந்ததால் சந்தேகம் அடைந்த சிலர், இது குறித்து அம்மையநாயக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயபாண்டிக்கு தகவல் தெரிவித்தனர்.



சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற, எஸ்.ஐ., தயாநிதி தலைமையிலான போலீசார் கஞ்சா பயிரிட்டு உள்ள தோட்டத்தில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தோட்டத்தில் கஞ்சா விவசாயத்தில் நாகராஜ் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து கைது செய்யப்பட்ட நாகராஜ் என்பவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தோட்டத்தில் பயிரிட்டு இருந்த கஞ்சா செடிகளை பறிமுதல் செய்த போலீசார், அவரிடமிருந்து கஞ்சா விதைகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும், அவரிடம் கடந்த எவ்வளவு நாட்களாக கஞ்சா விவசாயத்தில் ஈடுபட்டிருந்தார்? கஞ்சா விதைகளை எங்கு வாங்கினார்? கஞ்சா செடிகளை எங்கு விற்பனைக்கு அனுப்பினார்? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement