சுருளி அருவியில் தர்ப்பணம் தரும் இடத்தில் சுகாதாரக்கேடு

கம்பம் : சுருளி அருவியில் தர்ப்பணம் கொடுத்து குளிக்கும் இடத்தில் நிலவும் சுகாதாரக்கேட்டால் மக்கள் சிரமம் அடைகின்றனர்.

சுருளி அருவி சுற்றுலா தலமாகவும், ஆன்மிக தலமாகவும் உள்ளது. அருவியில் குளிக்கவும், மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க தினமும் திரளாக வருகின்றனர். ஆடி, தை மற்றும் மகாளய அமாவாசை நாட்களில் ஆயிரக்கணக்கில் தர்ப்பணம் கொடுக்க வருகின்றனர்.

தர்ப்பணம் கொடுக்க அமரும் ஆற்றங்கரை சுகாதாரக்கேட்டில் சிக்கி தவிக்கிறது. தர்ப்பணம் செய்வோர் ஆற்றில் விட்டு செல்லும் துணிகள், பொருள்கள் ஆங்காங்கே கிடக்கிறது.

அத்துடன் சுருளி ஆறு செடி கொடிகள் வளர்ந்து புதராக காட்சி தருகிறது. அருவியில் வெள்ளம் வரும் போதும், ஆறு புதராக மாறியதால் தண்ணீர் வாய்க்கால் செல்வது போன்று வருகிறது.

தர்ப்பணம் கொடுப்பவர்கள் குளிப்பதற்கு வசதிகள் இல்லை.

சுருளிப்பட்டி ஊராட்சியும், வனத்துறையும் மாதந்தோறும் லட்சக்கணக்கில் நுழைவுகட்டணம், வாகன கட்டணம், குளிப்பதற்கு கட்டணம் என வசூலிக்கின்றனர். ஆனால் சுருளியில் சுகாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. ஆற்றை தூர்வாரவும், தர்ப்பணம் கொடுப்பவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரவும் கலெக்டர் ரஞ்ஜீத் சிங் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement