மின்வாரியம், நீர் வளத்துறை 'ஈகோ'வால் இருளில் தவிக்கும் சோத்துப்பாறை அணை

-பெரியகுளம் : சோத்துப்பாறை அணையை சுற்றி மின் விளக்கு அமைக்கும் பணியில் நீர்வளத்துறை, மின்வாரியத்தினரிடையே நிலவும் 'ஈகோ' பிரச்னையால் மின் லைன் அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது.

பெரியகுளத்திலிருந்து 8 கி.மீ., தொலைவில் சோத்துப்பாறை அணை உள்ளது. இங்கு சனி, ஞாயிறு, வார நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அங்கிருந்து போடி ஒன்றியம், அகமலைக்கு 17 கி.மீ., தூரத்தில் செல்லலாம். சோத்துப்பாறை அணையில் இரவில் ஒரே ஒரு மின் விளக்கு மட்டுமே உள்ளது. பெரியகுளம் பகுதியிலிருந்து வரும் சிலர் இரவில் அணையை சுற்றியுள்ள பகுதிகளில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். விளக்கு வசதி இல்லாததால் அணை பகுதியில் நடைபெறுவதை கண்காணிக்க முடிவதில்லை.

எனவே , மஞ்சளாறு வடிநில கோட்டம் செயற்பொறியாளர் அலுவலகம் சார்பில் சோத்துப்பாறை அணையைச் சுற்றி மின் விளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக பெரியகுளம் மின்வாரிய உதவி பொறியாளர் தலைமையிலான குழுவினர், சோத்துப்பாறை அணையின் கீழ் இருந்து 300 மீட்டர் துாரத்திற்கு உயரழுத்த மின் கம்பிகள் இழுத்து அணை அருகே மலைப்பகுதியில் மின்கம்பம் ஊன்றினர். இன்றும் 200 மீட்டர் துாரத்தில் அணை உள்ளது.

இந்நிலையில் மின்வாரியம் மின் கம்பம் கொண்டு செல்ல வேலையாட்கள் சம்பளம் உட்பட செலவினங்களுக்கு பொதுப்பணித்துறை ஒத்துழைப்பு தரவில்லை என பிரச்னை ஏற்பட்டது. இதில் இரு துறைகளிடையே 'ஈகோ' எழுந்ததால் கடந்த பல நாட்களாக சோத்துப்பாறை அணை ரோட்டோரம் பயன்பாடின்றி மின் கம்பிகள் தரையில் கிடக்கிறது. இதனை கண்டு இப் பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள், மலை கிராம மக்கள் அச்சத்தோடு செல்லும் நிலை உள்ளது. பொதுப்பணித்துறை, மின்வாரியத்தின் 'ஈகோ' வால் மின் விளக்குகள் அமைக்கும் பணி முடங்கியுள்ளது. விரைவில் பணியினை நிறைவு செய்து சோத்துப்பாறை அணையை இருளில் இருந்து வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும்.

Advertisement