தியாகதுருகம் பகுதியில் மின்தடையால் மக்கள்... அவதி; புதிய துணை மின் நிலையம் அமைக்க கோரிக்கை

தியாகதுருகம் துணை மின் நிலையத்தில் இருந்து தியாகதுருகம் நகரம், ரிஷிவந்தியம், எலவனாசூர்கோட்டை, வீரசோழபுரம், நூரோலை உட்பட 40 க்கு மேற்பட்ட ஊர்களுக்கு மின் வினியோகம் செய்யப்படுகிறது.
நுகர்வோர் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக கடந்த, 6 ஆண்டுகளுக்கு முன் நாகலுார் துணைமின் நிலையம் பிரிக்கப்பட்டது.
அதன் பின்னரும் மின்னழுத்த குறைபாடு சீராகாததால், 16 எம்.வி.ஏ., திறன் கொண்ட டிரான்ஸ்பார்மரை மாற்றிவிட்டு 25 எம்.வி.ஏ., உயர்திறன் கொண்ட புதிய டிரான்ஸ்பார்மர் கடந்தாண்டு ஜூலை மாதம் நிறுவப்பட்டது. ஆனாலும், தியாகதுருகம் துணை மின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் பெறும் ஊர்களுக்கு சீராக மின்சாரம் தர முடியவில்லை. இங்கிருந்து 8 மின் வழி தடங்கள் மூலம் மின்விநியோகம் செய்யப்படுகிறது.
மின் விபத்து அபாயம்
ஒவ்வொரு வழித்தடத்திலும் நுகர்வோர்களின் எண்ணிக்கை இரு மடங்கு அதிகமாக உள்ளதால் மின் நுகர்வு அதிகரிக்கும் நேரங்களில் துணைமின் நிலையத்தில் 'இன்சுலேட்டர்கள்' வெடித்து சிதறி மின் கம்பிகள் வெப்பம் தாங்காமல் உருகி மின்தடை ஏற்படும் அளவுக்கு சிக்கல் உருவாகிறது. இதனால் ஒவ்வொரு வழித்தடத்திலும் அவ்வப்போது மின்தடை ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது.
ஒரே நேரத்தில், 8 வழித்தடங்களிலும் மின் வினியோகம் செய்ய முடியாத நிலை உள்ளது. இதன் காரணமாக பல கிராமங்களில் மின்சாரம் ஒரு மணி நேரம் கூட தடையின்றி கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
விவசாயிகள் பாதிப்பு
குறிப்பாக விவசாய மின் மோட்டார்களுக்கு முறையாக மும்மனை மின்சாரம் வழங்காததால் பயிர்களுக்கு நீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வியாபாரிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இப்பிரச்சனைக்கு தீர்வாக தியாகதுருகம் மற்றும் திருக்கோவிலூர் துணை மின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும் ஒரு பகுதி கிராமங்களை பிரித்து செங்கனாங்கொல்லையில் துணைமின் நிலையம் அமைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுகுறித்து 'தினமலர்' நாளிதழில் விரிவான செய்தி வெளியிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயன் சட்டசபையில் கோரிக்கை விடுத்தார்.இருப்பினும் செங்கனாங்கொல்லையில் துணை மின் நிலையம் அமைவது குறித்து அரசு இன்னும் எவ்வித உத்தரவும் வழங்கவில்லை.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'மக்களின் முக்கிய அடிப்படை தேவைகளில் ஒன்றான மின்சாரத்தை தடை இன்றி வழங்க வேண்டும். இதனால், அப்பகுதியில் விவசாயிகள், வியபாரிகள், மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர். அதனால்,அரசு இந்த விஷயத்தில் கவனம் செலுத்தி உடனடியாக செங்கனாங்கொல்லையில் புதிய துணை மின் நிலையம் அமைக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்,'என்றனர்.
மேலும்
-
பந்தலூரில் கொட்டி தீர்க்கும் கனமழை!
-
எனக்கே அதிகாரம்: என்னுடன் இருப்பவர்களுக்கு தான் தேர்தலில் சீட்; ராமதாஸ் திட்டவட்டம்
-
இடைவிடாது பெய்யும் கனமழை; வயநாடு முண்டக்கையில் மீண்டும் நிலச்சரிவு அபாயம்
-
பல தடைகளை தாண்டி....விண்வெளி நிலையத்திற்கு புறப்பட்டார் இந்திய வீரர் சுக்லா
-
ரயில் பயண கட்டணத்தை உயர்த்த கூடாது: பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கோரிக்கை
-
காற்றில் ஊழல் செய்து அம்பலப்பட்ட ஆ. ராசா அமித் ஷா பற்றி பேசலாமா: நயினார் நாகேந்திரன் கண்டனம்