ஆதரவற்ற பெண்கள் மேம்பாட்டுக்கு மானியத்தில் அரவை இயந்திரங்கள்

கள்ளக்குறிச்சி :மாவட்டத்தில் ஆதரவற்ற பெண்கள் மேம்பாட்டுக்கு அரசு மானியத்துடன் அரவை இயந்திரங்கள் பெற விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்த செய்திக்குறிப்பு:

மாவட்டத்தில் கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், ஆதரவற்ற மற்றும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள பெண்கள்வாழ்வதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு அரசின் மூலம் மானியத் தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

நடப்பு நிதியாண்டிற்கு உலர் மற்றும் ஈரமாவு அரைக்கும் வணிக ரீதியான இயந்திரங்கள் வாங்கும் போது 10 ஆயிரம் ரூபாய் அல்லது அதற்கு மேலான மொத்த விலையில் அதிகபட்சமாக 5 ஆயிரம் ரூபாய்மானியத் தொகையாக பெறலாம்.

விண்ணப்பத்தை https://kallakurichi.nic.in என்ற மாவட்ட இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து உரிய சான்றுகளை இணைத்து வரும் ஜூலை 14 அன்று மாலை 5:00 மணிக்குள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

உரிய சான்றுகள் இணைக்கப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். குறிப்பிட்ட தேதிக்குப் பின் விண்ணப்பங்கள் பெறப்படமாட்டாது.

விண்ணப்பதாரர்கள் தமிழகத்தில், பூர்விகமாக வசிப்பவர்களாக இருக்க வேண்டும். பிறப்பிடச் சான்று, வயதுவரம்பு 25 வயதிற்கு மேல் இருக்க வேண்டும். ஆதரவற்ற அல்லது கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் என்பதற்கான சான்று தாசில்தாரிடம் பெற்றிருக்க வேண்டும்.

ஆண்டு வருமானம், ரூ.1.20 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். தகுதியானவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement