காது பிரச்னை சிகிச்சைக்கு அழைத்து சென்ற மாட்டின் காலை 'பதம்' பார்த்த கால்நடை மருத்துவர்கள்: பாச போராட்டம் நடத்தும் பால் வியாபாரி

சென்னை: காது பிரச்னை என, கால்நடை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற பசு மாட்டின் கால்களை உடைத்து, சிகிச்சை அளிக்காமல் மருத்துவர்கள் திருப்பி அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எப்படியாவது மாட்டை காப்பாற்ற வேண்டுமென, கலெக்டர் வரை சென்று பால் வியாபாரி பாச போராட்டம் நடத்தி வருகிறார். சென்னை பல்லாவரத்தை அடுத்த பம்மல் சங்கர் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன், 55; பால் வியாபாரி.
அலட்சியம்
கடந்த 16ம் தேதி காலை, தான் வளர்க்கும் மாடுக்கு ஜுரம் மற்றும் காதில் ஏற்பட்ட பிரச்னைக்காக அருகில் உள்ள, பம்மல் அரசு கால்நடை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு பணியில் இருந்த அரசு கால்நடை மருத்துவரும், கம்பவுண்டரும், சிகிச்சைக்கு அழைத்து சென்ற மாட்டை கீழே தள்ளி, அதன் ஒரு பக்க கால்களை உடைத்ததாகவும், கேட்டபோது, இருவரும் தகாத வார்த்தைகளால் திட்டி, ராஜேந்திரனை விரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, மாட்டின் உரிமையாளர், சங்கர் நகர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார். மருத்துவர், கம்பவுண்டரை அழைத்து பேசிய போலீசார், மாட்டுக்கு உரிய சிகிச்சை அளித்து குணப்படுத்தும்படி கூறியுள்ளனர். சம்பவம் நடந்து ஒரு வாரமாகியும், கால்நடை துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டி வருவதாக புகார் எழுந்துள்ளது.
மாட்டின் உரிமையாளர் ராஜேந்திரன் கூறியதாவது: கடந்த 16ம் தேதி வளர்ப்பு மாடு, சிகிச்சைக்காக பம்மல் அரசு கால்நடை மருத்துவமனைக்கு அழைத்து சென்றேன். அங்கிருந்த மருத்துவர் ஹேமாவதி, கம்பவுண்டர் திருநாவுக்கரசு ஆகியோர், 'மாட்டை கம்பி வளையத்திற்குள் கொண்டு வந்தால்தான் சிகிச்சை அளிக்க முடியும்' என்றனர்.
'மாடு அசதியாக இருக்கிறது; அதால் நகர முடியவில்லை' என்றேன். கம்பவுண்டர் வலுக்கட்டாயமாக என் மாட்டை பின்னால் இருந்து தள்ளினார். இதனால் மாடு வழுக்கி விழுந்தது. கீழே விழுந்த மாட்டை துாக்கி, ஊசி போடும்படி கேட்டதற்கு, 'அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் என சொல்லி, படுக்கை நிலையிலேயே மாட்டுக்கு ஊசி போட்டனர். இருந்தும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
மாடால் எழுந்திருக்க முடியவில்லை என கூறியதற்கு, 'அதெல்லாம் ஒன்றும் இல்லை. மாட்டை ஓட்டிட்டு கிளம்பு; எல்லாம் சரியாகி விடும்' என்று என்னை விரட்டினர்.அதன் பின், கால் உடைந்ததால் நடக்க முடியாமல் கிடந்த மாட்டை குட்டியானையில் ஏற்றி வீட்டிற்கு அழைத்து வந்தேன். பல மணி நேரம் கடந்தும், மாடு படுத்த நிலையிலேயே இருந்தது. தீனி எதுவும் உண்ணவில்லை. மேலும், மருத்துவர்களிடம் கேட்டதற்கு, 'இங்கு வராதே, வேறு எங்கேயாவது போ' என்றனர்.
நடவடிக்கை
பின், கால்நடை ஆம்புலன்ஸ் வாயிலாக வேப்பேரியில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். அங்கும் முறையாக கவனிக்கவில்லை.
கடந்த 23ம் தேதி, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டரிடம் புகார் அளித்தேன். அவர், உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
அரசு கால்நடை மருத்துவர் ஹேமாவதி, கம்பவுண்டர் திருநாவுக்கரசு ஆகியோர், சில வெளி ஆட்களை அழைத்து கொண்டு, நேற்று முன்தினம் நான் இல்லாத போது என் வீட்டிற்கு வந்துள்ளனர். அங்கு, ஆங்கிலத்தில் உள்ள கடிதத்தை காட்டி என் மகனிடம், கட்டாயப்படுத்தி கையொப்பம் வாங்கியுள்ளனர். சிகிச்சை அளிக்காமல், மாட்டின் அருகில் நின்று புகைப்படம் எடுத்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட என் மாட்டிற்கு எந்த சிகிச்சையும் அளிக்காமல் அலையவிடுகின்றனர். சாகும் நிலையில் என் மாடு உள்ளது. வசதி இல்லை என்பதால் இஷ்டத்திற்கு அலையவிடுவது எந்த வகையில் நியாயம். சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
விசாரணை நடக்கிறது
பாதிக்கப்பட்டவரின் மாடுக்கு சிகிச்சை அளிக்க முக்கியத்துவம் தருகிறோம். அவர், நாங்கள் சொல்வதை கேட்கவில்லை. மாடுக்கு சிகிச்சை அளிக்க, 15 நாட்கள் மருத்துவமனையில் வைத்திருக்க வேண்டும் என்றோம்; அவர் முடியாது என கூறிவிட்டார். கலெக்டரிடம் மனு தந்த பின், மாட்டின் நிலை குறித்து தெரிந்து கொள்ளவே, அவர் வீட்டிற்கு சென்றோம். இதுகுறித்து, சம்பந்தப்பட்ட மருத்துவரிடம் விசாரனை நடக்கிறது.
- கால்நடை பராமரிப்பு துறை உயர் அதிகாரி,
செங்கல்பட்டு மண்டலம்
மேலும்
-
பல தடைகளை தாண்டி....விண்வெளி நிலையத்திற்கு புறப்பட்டார் இந்திய வீரர் சுக்லா
-
ரயில் பயண கட்டணத்தை உயர்த்த கூடாது: பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கோரிக்கை
-
காற்றில் ஊழல் செய்து அம்பலப்பட்ட ஆ. ராசா அமித் ஷா பற்றி பேசலாமா: நயினார் நாகேந்திரன் கண்டனம்
-
வி.சி.க. 234 தொகுதிகளுக்கு தகுதியானது; டீ, பன் கொடுத்து ஏமாற்ற முடியாது என்கிறார் திருமா!
-
திருப்பூரில் இந்து முன்னணி பிரமுகர் மர்மநபர்களால் வெட்டி படுகொலை!
-
பதவிக்காக சமூக நீதியை பலி கொடுக்கும் தி.மு.க. அரசு: அன்புமணி விளாசல்