ஆதரவற்ற பிள்ளைகளின் நலனுக்கு புதிதாக 'அன்பு கரங்கள்' திட்டம் மாவட்டத்தில் 11 ஆயிரம் பேர் தேர்வு ; அமைச்சர் கீதாஜீவன் தகவல்

திண்டுக்கல்,: ஆதரவற்ற பிள்ளைகளின் நலனுக்காக தமிழக அரசு புதிதாக செயல்படுத்த உள்ள அன்பு கரங்கள் திட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் 11 ஆயிரம் பேர் பயனாளிகளாக தேர்வுசெய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.

திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில், பச்சிளம் குழந்தைகளின் உடல் நலனை காக்கவும், தவறான பாலூட்டும் முறைகளால் ஏற்படும் பச்சிளம் குழந்தைகள் மரணங்களை தவிர்க்கவும், கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது. இதற்கு கலெக்டர் சரவணன் தலைமை வகித்தார்.

தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, சமூக நலன், மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயிற்சி முகாமை துவக்கி வைத்தனர்.

இந்தக்கூட்டத்தில், அரசுத்துறை செயலர்கள், அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

முன்னதாக நடந்த, கூட்டிணைந்த ஜவுளித்தொழில் பங்குதாரர்கள் கூட்டம் மற்றும் 2வது வழிகாட்டுதல் குழு கூட்டம் தனியார் ேஹாட்டலில் நடந்தது. அப்போது பேசிய அமைச்சர் கீதாஜீவன், 'ஆதரவற்ற குழந்தைகள் நலனுக்காக தமிழக அரசு 'அன்பு கரங்கள்' எனும் புதியத்திட்டத்தை தொடங்கியுள்ளது.

இதன்மூலம் தாய்-தந்தை ஆதரவற்று இருக்கும் பள்ளிக்குழந்தைகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும். திண்டுக்கல் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் 11 ஆயிரம் பேர் பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.' என்றார்.இதில் அரசுத்துறை செயலர் ஜெயஸ்ரீ முரளிதரன், கைத்தறித்துறை கூடுதல் இயக்குனர் மகேஸ்வரி ரவிக்குமார், பெண்கள் பொருளாதார அதிகாரமளித்தல் திட்ட மேலாளர் சுஹேலா கான் (ஐ.நா.,), ஐரோப்பிய யூனியனை சேர்ந்த லாரென்ட் லே டனாய்ஸ், ஜவுளித்துறை தொழில் அதிபர்கள், என்.ஜி.ஓ.க்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Advertisement