அதிகாரத்துக்காகவே 1975ல் அவசர நிலை முன்னாள் முதல்வர் எடியூரப்பா குற்றச்சாட்டு

பெங்களூரு : ''இந்திரா பிரதமராக இருந்தபோது, 1975ல் அவசர நிலையை அறிவித்தார். அவரின் அதிகாரத்துக்காக, புனிதமான அரசியலமைப்பு தியாகம் செய்யப்பட்டது,'' என, முன்னாள் முதல்வர் எடியூரப்பா பேசினார்.

பெங்களூரு டவுன் ஹானில் நேற்று, 'சமூக நீதிக்கான பெங்களூரு குடிமக்கள்' அமைப்பு, '1975 அவசர நிலை 50வது ஆண்டு இருண்ட நாட்கள்' என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடத்தியது.

இதில் பங்கேற்று முன்னாள் முதல்வர் எடியூரப்பா பேசியதாவது:

இந்திரா பிரதமராக இருந்தபோது, 1975ல் அவசர நிலையை அறிவித்தார். அவரின் அதிகாரத்துக்காக, புனிதமான அரசியலமைப்பு தியாகம் செய்யப்பட்டது.

அவசர நிலையின்போது, குடிமக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டன. அதிகாரத்துக்காக, பத்திரிகை சுதந்திரம், நீதித்துறையின் சுயாட்சி, பொது உரிமைகளின் சுதந்திரம் பறிக்கப்பட்டன.

நீதித்துறை, நிர்வாகம், சட்டசபை அமைப்புகளை தங்கள் கைப்பிடியில் வைத்திருப்பதற்காக, அவசர நிலையை பிரகடனப்படுத்தினார்.

இக்காலகட்டத்தில் பேச்சு சுதந்திரம், அரசியல் சுதந்திரம் பறிக்கப்பட்டன. பத்திரிகை சுதந்திரம் முழுதும் பறிக்கப்பட்டது. ஜனநாயகம் நெரிக்கப்பட்டு, எங்கும் குழப்பம் நேர்ந்தது. சுதந்திர போராட்டத்தில் முன்னணியில் இருந்த காங்கிரஸ் கட்சி, நாடு சுதந்திரம் அடைந்த பின், அதிகாரத்தில் இருப்பதற்காக, அவசர நிலையை பிரகடனப்படுத்தியது.

இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement