சுப்புதேவன் வலசையில் கிணறு அமைத்து குடிநீர் எடுப்பு: தடுக்க  மக்கள் வலியுறுத்தல்

ராமநாதபுரம் :ராமநாதபுரம் அருகே சுப்புத்தேவன் வலசை கிராமத்தில் அனுமதியின்றி சிலர் கிணறு அமைத்து தண்ணீரை எடுத்து லாரிகளில் விற்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்

தெற்குத்தரவை ஊராட்சி சுப்புத்தேவன் வலசை கிராம மக்கள் 50க்கு மேற்பட்டோர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க ஊர்வலமாக வந்தனர். அப்போது ஊர் மக்கள் கூறியதாவது:

சுப்புதேவன் வலசையில் 40 ஆண்டுகளாக குடிநீர் வசதியின்றி சிரமப்படுகிறோம்.

காவிரி குடிநீர் வரவில்லை. ஊராட்சி குடிநீரை நம்பி வாழ்கிறோம். இந்நிலையில் சிலர் சட்ட விரோதமாக கிணறுகள் அமைத்து 40 அடிக்கு கீழே ஆழ்குழாய் அமைத்து தினமும் லாரிகளில் தண்ணீரை எடுத்துச்செல்கின்றனர்.

இதனால் ஊராட்சி குடிநீர் தரம் குறைந்து உவர்ப்பு தன்மை அதிகரித்துள்ளது. எனவே எங்கள் கிராமத்தில் கிணறுகளில் இருந்து லாரிகளில் தண்ணீர் கொண்டு செல்வதை தடுக்க வேண்டும். கிணற்றின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Advertisement