பரமக்குடியில் ஓவர் லோடால் அடிக்கடி கரன்ட் கட் ஆகுதாம்; மின்வாரிய பதிலால் மக்கள் எரிச்சல்

பரமக்குடி: பரமக்குடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அடிக்கடி மின்தடை உண்டாகும் நிலையில் ஓவர் லோடு, ஜம்பர் கட் என்ற மின்வாரிய பதிலால் மக்கள் எரிச்சல் அடையும் சூழல் உள்ளது.

பரமக்குடி 110 கே.வி., உப மின் நிலையத்தில் இருந்து பரமக்குடி மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. பரமக்குடி நகராட்சி ராமநாதபுரம் மாவட்டத்தில் பிரதான வணிக நகரமாக உள்ளது.

இங்கு விவசாயம், கைத்தறி தொழில் பிரதானமாக உள்ளதுடன், சிட்கோ உள்ளிட்ட பகுதிகளில் பல கோடி மதிப்புள்ள உபகரணங்கள் தயாரிக்கும் பணிகள் நடக்கிறது.

இந்நிலையில் மின்சாரம் இன்றி எந்த தொழிலும் நடக்காத நிலை உள்ளது.

தொடர்ந்து கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் என ஏராளமாக இருக்கிறது.

இச்சூழலில் கடந்த சில நாட்களாக பரமக்குடி மற்றும் அனைத்து துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளும் மின்தடை அதிகளவில் இருக்கிறது.

பகல் நேரங்களில் மட்டுமல்லாது, இரவிலும் தொடரும் மின்தடையால் மக்கள் எரிச்சல் அடையும் சூழல் உள்ளது.

இது குறித்து மின்வாரிய அதிகாரிகள் மற்றும் அலுவலகத்தில் எப்போது தொடர்பு கொண்டாலும் ஜம்பர்கட் அல்லது ஓவர் லோடு என்ற பதிலே கிடைக்கிறது.

மின் ஊழியர்களின் எண்ணிக்கை குறைந்த அளவே உள்ள சூழலில், ஏராளமான புதிய மின்மாற்றிகள் அமைக்கப்பட்டு வருகிறது.

ஆகவே மின்தடை ஏற்படும் சூழல்களை சீர் செய்ய மாவட்ட நிர்வாகம் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வணிகர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement