கமுதியில் கடைகளுக்கு லாரியில் சரக்கு இறக்க நேரம் ஒதுக்க மக்கள் கோரிக்கை

கமுதி : கமுதி பகுதியில் ரோட்டில் நிறுத்தப்பட்டு லாரிகளில் கடைகளுக்கு சரக்கு இறக்குவதால் வாகன நெரிசலால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

கமுதி சாயல்குடி ரோடு பஜார் வீதி குறுகலான ரோடாக உள்ளது. எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட்டு செல்வதற்கு சிரமம் ஏற்படுகிறது.

இந்நிலையில் இப்பகுதியில் உள்ள கடைகளுக்கு காலை நேரத்தில் சரக்கு லாரியை ரோட்டில் நிறுத்தி சரக்குகளை இறக்குவதால் அடிக்கடி போக்குவரத்து பாதிக்கிறது.

காலை நேரத்தில் இதுபோன்று செய்வதால் பள்ளி கல்லுாரி செல்லும் மாணவர்கள், அரசு அதிகாரிகள் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.

அதுமட்டும் இல்லாமல் எதிரே வரும் வாகனங்களுக்கு வழி விட்டு செல்லும் போது விபத்தும் ஏற்படுகிறது. கமுதி சாயல்குடி ரோட்டில் லாரிகளை நடுரோட்டில் நிறுத்தி கடைகளுக்கு சரக்கு இறக்குவது தொடர்கிறது.

எனவே பல்வேறு நகரங்களில் உள்ளது போல் சரக்கு லாரிகள் பகலில் நுழைய தடை உள்ளது. இரவு மற்றும் அதிகாலை நேரத்தில் போக்குவரத்துக்கு இடையூறு இன்றி சரக்கு இறக்கிக் கொள்ள வேண்டும் என்ற நடைமுறையை கமுதி பகுதியிலும் கடைபிடிக்க வேண்டும்.

இதுபோன்று கடைப்பிடித்தால் போக்குவரத்து நெரிசல் குறையும்.இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Advertisement