சொத்து குவித்த புகாரில் 8 அதிகாரிகள் வீடுகளில்... 'ரெய்டு!'; தங்க, வெள்ளி நகை, சொத்து ஆவணங்கள் பறிமுதல்

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்கிரஸ் அரசு நடக்கிறது. அரசின் பல துறைகளில் பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் தங்கள் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ப்பது பற்றி, லோக் ஆயுக்தா போலீசார் விசாரிக்கின்றனர். சொத்து குவிக்கும் அதிகாரிகள், ஊழியர்கள் வீடுகளில் அடிக்கடி சோதனை நடத்தி தங்கம், வெள்ளி நகைகள், சொத்து ஆவணங்கள், வாகனங்களை பறிமுதல் செய்கின்றனர்.
தலைமை இன்ஜி.,
இந்நிலையில், பெங்களூரு கோவிந்தராஜ நகர் மாநகராட்சி அலுவலக உதவி இன்ஜினியர் பிரகாஷ், ஷிவமொக்கா இயற்கை விவசாய துறை ஆராய்ச்சி இயக்குனர் பிரதீப், சிக்கமகளூரு டவுன் நகரசபை கணக்கு அதிகாரி லதா மணி, பெங்களூரு ரூரல் ஆனேக்கல் டவுன் பஞ்சாயத்து தலைமை அதிகாரி அமர்நாத், கதக் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் துருவராஜ்.
கர்நாடக நீர்பாசனத் துறை தலைமை இன்ஜினியர் அசோக் வாசானந்த், கலபுரகி ஊரக மற்றும் பஞ்சாயத்து வளர்ச்சி நிர்வாக இன்ஜினியர் மல்லிகார்ஜுன் அலிபுரா, கலபுரகி பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரி ராமசந்திரா ஆகிய எட்டு அதிகாரிகளும், தங்கள் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து இருப்பதாக, லோக் ஆயுக்தா போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
40 இடங்கள்
இந்த தகவலின் அடிப்படையில், எட்டு அரசு அதிகாரிகள் வீடுகளிலும், நேற்று காலை 7:00 மணி முதல் லோக் ஆயுக்தா போலீசார் சோதனை நடத்தினர். பெங்களூரு, ஷிவமொக்கா, கலபுரகி, பீதர், பெலகாவி, சிக்கமகளூரு, தார்வாட், விஜயபுரா உட்பட 12 மாவட்டங்களில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
கலபுரகி ஊரக மற்றும் பஞ்சாயத்து வளர்ச்சி நிர்வாக இன்ஜினியர் மல்லிகார்ஜுன் அலிபுராவுக்கு சொந்தமான பெங்களூரு, கலபுரகி வீடுகளில் சோதனை நடந்தது. இரு வீடுகளில் இருந்தும் தங்கம், வெள்ளி நகைகள் சிக்கின. சிக்கிய நகைகள் மதிப்பை கணக்கிடும் பணி நடக்கிறது. மல்லிகார்ஜுன் அலிபுரா இன்னும் இரண்டு நாட்களில் பணி ஓய்வு பெற இருந்தார். இந்த நிலையில் அவரது வீட்டில், லோக் ஆயுக்தா ரெய்டு நடத்தி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து உள்ளது.
அதிகாரிகள் பீதி
இதுபோல கலபுரகி பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரி ராமசந்திராவுக்கு சொந்தமான, சன்னுார் கிராமத்தில் உள்ள பண்ணை வீடு, விஜயபுராவின் பொம்மனஹள்ளியில் உள்ள வீட்டிலும் சோதனை நடந்தது. இந்த சோதனையின் போது விவசாய நிலங்கள், வீடுகள் வாங்கியதற்கான ஆவணங்கள் சிக்கின.
இவர்களை தவிர மற்ற ஐந்து அதிகாரிகளும் வீடு, நிலம், சொத்துக்களை வாங்கி குவித்ததற்கான ஆவணங்கள் சிக்கி உள்ளன. விலை உயர்ந்த கை கடிகாரங்கள், வெளிநாட்டு கரன்சிகளும் சிக்கி உள்ளது. அனைத்தையும் லோக் ஆயுக்தா போலீசார் கைப்பற்றினர். எவ்வளவு சிக்கி உள்ளது என்பதை மதிப்பிடும் பணி நடந்து வருகிறது.
'அரசின் அனைத்து துறைகளிலும் ஊழல் நடக்கிறது; அதிகாரிகள் கொள்ளை அடிக்கின்றனர்' என்று எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டு கூறி வரும் நிலையில், எட்டு அதிகாரிகள் வீடுகளில், லோக் ஆயுக்தா சோதனை நடத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது. சக அதிகாரிகள் வீடுகளில் சோதனை நடந்து இருப்பதால், சொத்து குவித்த மற்ற அதிகாரிகளும் பீதியில் உள்ளனர்.
மேலும்
-
ரேஷன் அரிசி மூட்டை ஏற்றி வந்த லாரி சேமிப்பு கிடங்கு சுவரில் மோதி விபத்து
-
101 வயது அச்சுதானந்தன் கவலைக்கிடம்; தொடர்ந்து கண்காணிக்கும் மருத்துவர்கள்
-
எங்களுடைய கூட்டணி இறுதியானது; உடைக்க நினைப்பது நடக்காது: நயினார் நாகேந்திரன் பேட்டி
-
நீலகிரி, கோவைக்கு 2 நாட்கள் ஆரஞ்ச்; தேனி, தென்காசிக்கு மஞ்சள் அலெர்ட்!
-
பந்தலூரில் கொட்டி தீர்க்கும் கனமழை!
-
எனக்கே அதிகாரம்: என்னுடன் இருப்பவர்களுக்கு தான் தேர்தலில் சீட்; ராமதாஸ் திட்டவட்டம்