எங்களுடைய கூட்டணி இறுதியானது; உடைக்க நினைப்பது நடக்காது: நயினார் நாகேந்திரன் பேட்டி

10

சென்னை: ''எங்களுடைய கூட்டணி இறுதியானது. கூட்டணி உடைக்க நினைக்கும் முயற்சி நடக்காது'' என தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.




இது தொடர்பாக நிருபர்கள் சந்திப்பில் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: முருக பக்தர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட கூட்டத்தை, பார்த்து எங்களது பலத்தை தெரிந்து கொண்டால் சரி. முதல்வர் ஸ்டாலின் காஸ் சிலிண்டர் விலையை குறைப்பாரா? குறைப்பேன் என்று சொல்லி, 4 ஆண்டுகள் ஆகி உள்ளது. டீசல், பெட்ரோல் விலையை குறைப்பேன் என்று சொன்னார்கள். டீசல் விலையை மற்றும் கொஞ்சம் குறைத்தார்கள். ஆனால் பெட்ரோல் விலையை குறைக்கவில்லை. கட்சி பணிகள் தொடர்பாக, நாங்கள் ஆலோசனை நடத்தியது எல்லாம் பற்றி சொல்ல முடியாது.

இறுதியானது



எங்களுடைய கூட்டணி இறுதியானது. உறுதியானது. பா.ஜ., கூட்டணியை உடைப்பதற்கான முயற்சி நிறைவேறாது. தமிழகத்தில் பா.ஜ, கூட்டணியை உடைக்கும் முயற்சி நடக்கிறது. மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டை ஹிந்து முன்னணி நடத்தியது. அதில் நாங்கள் கலந்து கொண்டோம். என்னிடம் கேட்கும் கேள்விகளை எல்லாம் முதல்வரிடம் கேளுங்கள். போலீஸ் ஸ்டேஷனுக்கு புகார் கொடுக்க சென்ற கர்ப்பிணி பெண் தாக்கப்பட்டு உள்ளார்.

புதிய திருப்பம்



மதுரையில் நடந்த மாநாடு புதிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. மத்திய உள்துறை அமைச்சரை பார்த்து ஆ.ராசா தகாத வார்த்தையால் பேசியுள்ளார். நான் முதல்வர் ஸ்டாலினை மதிப்பிற்குரிய முதல்வர் என்று ஏன் சொல்கிறேன். அவர் எனக்கு முதல்வர் என்ற முறையில் மரியாதை உடன் பேசுகிறேன். தமிழ் பண்பாடு மற்றும் கலாசாரம் பற்றி பேசும் முதல்வர் ஸ்டாலின் தகாத வார்த்தையால் பேச, ஆ.ராசாவை அனுமதிக்கிறாரா?

வரவேற்போம்



எப்போதும் ஒரு கட்சி வெற்றி பெற போகிறது என்றால் அதன் பக்கம் எல்லோரும் வந்து கொண்டு இருப்பார்கள். அதனால் யார் எங்களது கட்சிக்கு வந்தாலும் வரவேற்போம். ஹிந்து மதத்தில் என்ன பாகுபாடு இருக்கிறது. பாகுபாடு என்பது எங்கும் கிடையாது. ஹிந்து என்பது ஒரு வாழ்வியல் முறை. இவர்கள் மாதிரி ஒரு சமுதாயத்திற்கு ஆதரவாகவும், மற்றொரு சமுதாயத்திற்கு எதிராகவும் பேசி, சந்தர்பவத்தை பயன்படுத்தும் சந்தர்பவாதிகள் எங்களிடம் யாரும் கிடையாது. இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.

Advertisement